திருத்தல விளக்கம் 811

ஆதீபிதேசம் (தீபிதம்-விளக்கொளி): சிவாத்தானத்தில் பிரமன் செய்த வேள்வியை அழிக்க வந்த நதியைத் தடைசெய்ய வந்த திருமால் நள்ளிரவில் விளக்கொளியாய் நின்று அப்பொருள் பயக்கும் ‘ஆதீபிதேசர்’ எனச் சிவலிங்கம் நிறுவிப் போற்றி அத்தலத்திற்கு எதிரில் விளக்கொளிப் பெருமாள் என்னும் திருப்பெயரைச் சிவபிரானார் வழங்க வீற்றிருக்கின்றனர். விளக்கொளிப் பெருமாள் வழிபட்ட விளக்கொளியீசரைப் போற்றினோர் வேண்டிய வரங்களைப் பெற்று முத்தியையும் பெறுவர். இத்தலம் ஆலடிப் பிள்ளையார் கோயில் தெரு கீரைமண்டபத்திற் கருகில் விளக்கொளிப் பெருமாளுக் கெதிரில் உள்ளது.

சார்ந்தாசயம் (சார்ந்தார்க்குப் பற்றுக்கோடு); பராசரமுனிவர் தவத்தால் தோன்றி வேதபுராணங்களைக் கரைகண்டு வகுத்தமையால் வேதவியாசர் எனப் போற்றப்படும் முனிவரர் கலியுகம் வருதலைக் கண்டஞ்சிக் காசியை அடைந்து நோன்புகள் புரிந்து வந்தனர்.

முனிவரர்கள் அவரை அடுத்து நூல்களின் மெய்ப்பொருளைத் தெள்ளிதின் விளக்கவேண்டினர். வியாசரும் தனித்தனி விரித்துரைத்தனர். கேட்டு மகிழ்ந்த முனிவரர் தொகுத்து இது பொருள் என ஒரே வார்த்தையில் விளக்கவேண்டினர். முன்தோற்றிய பொருளுக்கு மாறுபட ‘நாராயணனே பரப்பிரமம்’ ஆகும். இது சத்தியம் சத்தியம்!’ என்று கையெடுத்துச் சூள் கூறிய வியாசர் சொற்கேட்டு முனிவரர் அஞ்சினர்.

முனிவரரொடு சபதம் செய்த வியாசர் விசுவநாதர்முன் இரு கைகளையும் எடுத்து நிறுத்தி முன்கூறியவாறே கூறினர். எப்பெயரும் தம் பெயரே ஆகலின் விசுவநாதப் பெருமான் வெகுண்டிலர். நந்திபெருமான் சாபத்தால் வியாசர் கைகள் மடக்க முடியாமல் பெருமான் புகழை நிலைநிறுத்தும் வெற்றித் தூண்கள்போல் நின்றன. திருமாலைத் துதித்தனர் முனிவர்.

திருமால் எதிர்தோன்றி, ‘என்ன காரியஞ் செய்தனை! நீயும் கெட்டனை! என்னையும் கெடுத்தனையே! மற்றியாவரையும் விலக்கிச் சிவபெருமான் ஒருவரே தியானிக்கற்பாலர்’ என அதர்வசிகை எடுத்தோதும் நிலையைக் கைவிட்டனை. அவர் அருளைப்பெற்ற முறையால் ஒரோவழி உபசரித்துக் கூறும் வாக்கியத்தைக் கொண்டு யாண்டும் எடுத்தோதும் உண்மை மொழியை மறந்தனையே பேதாய்! பலவாறு தெருட்டத் தெருண்ட வியாசர் ‘சிவனை யாவரே அருச்சனை செய்யாதவர் சிவன் மற்றெவரை யாயினும் அருச்சினை இயற்றிய துண்டோ’ என்று கூறிச் சிவபெருமானைப் பல்வகையாகப் போற்றினர்.

உமையம்மையோடும் விடைமேல் தோன்றிய சிவபிரானார், ‘வியாசனே, நீ போற்றிய திருமாலும் பிரமனும் இரண்டு திருவடிகளையும் தாங்கி வருதலைக் காண். மேலும், கற்பங்கள் தோறும் கணக்