தக்கேசம்: வேள்வி நாயகனான சிவபிரானை மதியாது வேள்வி
வடிவினராம் திருமால் முதலியோரைக் கொண்டொரு வேள்வியைத்
தொடங்கினன் தக்கன். உமையம்மையார் காணச் சென்று பழித்த
தந்தையாகிய தக்கன் யாகம் பாழ்படச் சாபமிட்டுக் கயிலையை அடைந்த
வழிச் சிவபிரான் தன் கூற்றில் வீரபத்திரரையும் அம்மையார் தன் கூற்றில்
காளியையும் தோற்றுவித்து வேள்வியை அழிக்குமாறு செலுத்தப்
பூதகணங்களுடன் போய்த் ததீசி முனிவர் நன்மொழியைக் கேளாத
தக்கனையும், அவையையும் நோக்கிச் சிவபிரானுக்குரிய அவியைக்
கொடுக்குமாறு தூண்டினர்.
மறுத்தமையால் பூத கணங்களைக் காவற் படுத்திய வீரபத்திரர்
உள்ளே புகுந்து சூரியர் கண்களைப் பறித்தும் பற்களைத் தகர்த்தும்,
சந்திரனைக் காலாற்றேய்த்தும், அக்கினியின் கையையும் நாவையும்
துண்டுபடுத்தியும் ஏனைத் தேவரையும் பொருந்திய தண்டங்களைச்
செய்தும் செய்வித்தும் நிறுத்தினர்.
உடன்சென்ற காளியும் சரசுவதியின் கொங்கையையும், மூக்கையும்
அரிந்தும் பெண்டிர்பிறரைத் தண்டித்தும் நின்றனள். அந்நிலையில் காக்க
நின்ற திருமால் விடுத்த சக்கரப்படையை வீரபத்திரர் அணிந்திருந்த
தலைமாலையுள் ஓர்தலை விழுங்கியது. இவ்வாறாகப் பெருமானார்
அம்மையொடும் விடைமேற்றோன்றி போற்றி அடைக்கலம் புக்க
விண்ணோரைக் காத்து அருள் புரிந்தனர். தக்கனை ஆட்டுத்தலையைப்
பொருத்தி உயிர்பெறச் செய்தனர் பிரானார். பெருமான் திருமால் முதலாம் விண்ணோரை நோக்கித் தக்கன்
யாகத்திற் பங்குகொண்ட பாவம்தீர எம்மைப் பூசனைபுரிவீராக. புரியுங்காறும்
சூரபதுமன் முதலான அவுணர் நுமக்குப் பகைவராய் நலிவு செய்வர்’ என
அருளித் திருவுருக் கரந்தனர். தக்கன் தன் மக்கள் பூசனை புரிந்த அச்
சூழலை அடுத்துச் சிவலிங்கம் தாபித்துப் பூசனைபுரிந்து சிவகணத் தலைமை
பெற்றனன். பூசனையை மறந்த விண்ணோர் சூரபதுமன் ஆட்சியில் துன்பக்
கடலில் மூழ்கினர். பிரமனால் அறிந்த விண்ணோர் யாவரும் சிவபூசனை
புரிந்து அச்சூரன் முதலானோரை முருகப்பெருமான் தொலைவு செய்தமையால்
மகிழ்ந்து வாழ்ந்தனர். ‘தக்கேசம்’ என்னும் இத்தலம் பிள்ளையார்பாளையம்
கச்சியப்பன் தெருவிலுள்ளது.
வயிரவேசம்: மேருமலைச் சிகரத்தில் தவஞ்செய்த முனிவரர் சிலர்
முன் பிரமன் தோன்றினான். ஐந்து முகங்களையுடைய பிரமனை முனிவரர்
பின்வருமாறு வினாவினர்; ‘காணப்படும் இவ்வுலகம் யாரை முதல்வனாக
உடையது? இது எவரிடத்துத் தோன்றி நின்றொடுங்கும்? பலவாய
பசுக்களினுடைய பாசத்தை நீக்கி அருள்செய்யும் தலைவன்யாவன்? இவற்றை
விரித்துரைத்தருள்க’ என வேண்டினர்.
பிரமன், மூவகை வினாவிற்கும் உரிய முதற்பொருள் தானே எனத்
தருக்கினன். அப்போது வேதங்கள் வெளிப்பட்டு ஒருங்கும் தனித்
|