அவனது அகந்தையை நீக்கக் கருதிய கருணையொடும் குமரப்பிரானார்
வேதனை அழைத்து ஒருவாறு வணங்கிய வேதனை ‘வேதம் வல்லையோ’
என வினவினர்.
ஓம் மொழிப் பொருளின் உண்மைகாணாது மயங்கிய பிரமனைக்
குட்டிச் சிறையி லிட்டுப் பிரம கோலத்துடன் படைத்தற்றொழிலை
மேற்கொண்டனர் தேவசேனாதிபதி.
தேவர் முறையீட்டிற்குத் திருச்செவி சாத்திய சிவபிரானார் நந்தியை
விடுத்தபோது முருகப்பெருமான் பிரமனைச் சிறைவீடு செய்யாமையின் தாமே
போந்து பிரமனை விடுவித்தனர். பிரமன் வேற்கடவுள் கருணையால் நல்லறிவு
பெற்றேனென வணங்கித் தன் இருக்கை சார்ந்து படைப்புத் தொழிலை
மேற்கொண்டனன்.
சிவபிரான் மடித்தலத்திலிருந்து முருகப்பெருமான் ஓம்மொழிப்
பொருளைத் தந்தையார்க்கு வெளிப்படுத்தி அவரருளைப் பெற்றனர்.
ஆயினும் தந்தையார் பணியாகிய பிரமனைச் சிறைவீடு புரியாமையான்
நேர்ந்த பிழைதீரத் தம்பெயரால் தேவசேனாபதீசர் எனச் சிவலிங்கம்
இருத்திப் போற்றினர்.
முருகப்பெருமான் மான்தோலுடையும், தருப்பை அரைநாணும்,
திருக்கரங்களில் உருத்திராக்க வடமும், கமண்டலமும் விளங்க நினைப்பவர்
பிறப்பறுதற்கு ஏதுவாகிய குமரக்கோட்டத்துள் முனிவரர் போற்றத்
தேவசேனாபதீசர் திருமுன்பு மேற்கு நோக்கிய திருக்கோலத்துடன் நின்றருள்
புரிவர். அவர்தம்மை வணங்குவோர் இன்பமுத்தியை எளிதிற் பெறுவர். அடியவரை மயக்கும் குற்றத்தினின்றும் எஞ்ஞான்றும் தவிரவும்
மார்க்கண்டேயரை வஞ்சகப் படுத்த முயன்ற பிழை தீரவும் தேவசேனாபதீசப்
பெருமானை வணங்கி ‘உருகும் உள்ளக்கோயிலான்’ என்னும் திருப்பெயருடன்
திருமால் குமரகோட்டத்தில் முருகப்பெருமான் அருளையும் பெற்று
விளங்குகின்றனர்.
குமரகோட்டம் என்னும் இத்தலம் காஞ்சிக்கு நடுநாயகமாய்
விளங்குகின்றது.
கண்ணேசம்: (கண்ணன்-கரியன்) திருப்பாற்கடலில் எழுந்த விடத்தால்
கரிந்து வெப்புற்ற திருமால் ‘கண்ணேசர்’ என்ற பெயரால் சிவலிங்கம்
நிறுவிப் போற்றி அப்பெருமான் ஆணைப்படி திருவேகம்பத்தில்
திருமுடியில் உள்ள நிலவின் அமுத கிரணத்தால் வெப்பம் நீங்கி
நிலாத்துண்டப் பெருமாள் என்னும் திருநாமம் பெற்றனர். கண்ணேசத்தில்
வழிபாடு செய்வோர் மேலுலகில் வாழ்வர்.
இக்கண்ணேசம் செங்கழுநீரோடை வீதியில் மொட்டைக் கோபுரத்திற்
கெதிரில் உள்ளது.
|