அந்தணன், அஞ்செழுத்தருள் மொழியை உபதேசம் செய்து ஆட்கொண்டான்.
 
  ‘சீரார் பெருந்துறையில் எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால்
அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண் அம்மானாய்’
 
என்றும்,
 
  ‘உய்யுநெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளை
ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே,
 
என்றும் கூறியவாற்றால் இதனை அறியலாம். அடிகளை ஆட்கொண்ட பின்பு இறைவன், ‘நீ தில்லைக்கு வருக’ என்று சொல்லி அடியார்களுடன் மறைந்தருளினான். இனி, இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடிகள் தம்மை மறந்து அவனையே நினைக்கும் இயல்பினராயினார்; தமக்கென ஒரு செயலின்றி எல்லாம் அவன் செயலே என்று இருந்தார்; குதிரை வாங்குவதற்கென்று கொண்டுவந்த பொருள் எல்லாவற்றையும் இறைவன் திருப்பணிக்கும், இறைவன் அடியார்க்கும் செலவிட்டார்.
 
  ‘அன்றே யென்றன் ஆவியும் உடலும் உடைமை யெல்லாமும்
குன்றே யனையாய் எனையாட் கொண்ட போதே கொண்டிலையோ!’

என்பதனால், எல்லாம் இறைவனது பொருளேயாதலால், அவனது திருப்பணிக்குச் செலவு செய்தல் பொருத்தந்தானே!

ஆனால், இச்செய்தியினை உணர்ந்த பாண்டியன், சினமுற்று அடிகளுக்குத் திருமுகம் அனுப்பி அழைத்தான். அடிகளுக்குத் தம் நினைவு சிறிதே வரப்பெற்றதும் தம்மையாட்கொண்ட பெருமானிடம் சென்று முறையிட்டுக்கொண்டார். ‘குதிரைகள் மதுரைக்கு வந்து சேரும்; அஞ்சாது போய் வருக’ எனப் பெருமானும் விடை தந்தருள, அடிகள் மதுரைக்குத் திரும்பிப் பாண்டியனிடம் இந்நற்செய்தியினைக் கூறினார். எனினும், குறித்த நாளில் குதிரைகள் வாராது போகவே, பாண்டியன் தண்டலாளரை ஏவி, அடிகளைச் சிறைப்படுத்தித் துன்புறுத்தச் செய்தான். அடிகளுக்கு அருள்புரிவான் வேண்டிக் காட்டில் திரியும் நரிகளைக் குதிரைகளாக்கித் தேவகணங்களைப் பாகர்களாகவும், தானே குதிரைச் சேவகனாகவும் குதிரைச் சாத்தோடு மதுரை மாநகரம் வந்தான். இவ்வரலாற்று உண்மையினைப் பின்வரும் அடிகளது வாக்குகளால் இனிது அறியலாம்.