சுவாமிகள் அவர்கள்
திருவுளம்பற்றிய வண்ணம் திருவள்ளுவர் ஆண்டு 2000 (சௌமிய ஆண்டு) வைகாசித் திங்கள் 23-ம் நாள் (5-6-1969) தருமையாதீன முதற்குரவர் ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் குருபூஜை விழா
மலராக வெளிவருகின்றது. இத்திருமுறைக்கும்
குறிப்புரை எழுதுதல் வேண்டும் என்று ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானத்தில்
எழுந்த அருளாணையின் வண்ணம் அடியேன் இயன்ற
அளவில் அப்பணியை ஒருவாறு நிறைவேற்றியுள்ளேன்.
இவ் வரும்பெரும் பணிக்கு அடியேனை ஆளாக்கியருளிய
ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமகாசந்நிதானமவர்களது
திருவடிமலர்கட்கு எனது மனமொழி
மெய்களாலாகிய வணக்கங்களைத்
தெரிவித்துக் கொள்கின்றேன். இத்திருமுறையின்
ஆசிரியர் ஒன்பதின்மரது
வரலாற்றையும் ஆராய்ந்து தெளிவுற எழுதித்தந்தவர்கள்
தருமையாதீனப் பல்கலைக் கல்லூரிப் பொறுப்பு
முதல்வர் திருநெறிச்செம்மல், நல்லிசைப் புலவர், வித்துவான்,
திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள், அன்பநாதபுரம் வகையார்
அறத்துறைக் கல்லூரித்
தமிழ்ப்பேராசிரியர் செஞ்சொற்கொண்டல்,
வித்துவான். திரு. சொ. சிங்காரவேலனார்
எம் ஏ, டிப்-லிங் அவர்கள் திருவிசைப்பாப்
பொருள்நலம் பற்றியும், தருமையாதீனப்
பல்கலைக்கல்லூரிப் பேராசிரியை வித்துவான்
திருமதி ப. நீலா அவர்கள் திருவிசைப்பா
இலக்கிய நலமும் பண்பாடும் என்பது
பற்றியும், அரிய
ஆராய்ச்சிக்கட்டுரைகளை எழுதி உதவினார்கள்.
கல்வெட்டு ஆராய்ச்சிக் கலைஞர்
வித்துவான் திரு. வை. சுந்தரேச வாண்டையார்
அவர்கள், திருவிசைப்பாத் தலங்களின் வரலாறு
கல்வெட்டுக் குறிப்புக்கள் பற்றிய
தங்கள் ஆராய்ச்சிகளை முதற்கண்
நன்கு தொகுத்தளித்தார்கள்.
இத்திருமுறைக்குப் பாட்டகராதி,
சொல்லகராதிகளைத்
தொகுத்தளித்ததுடன், அச்சாகும்பொழுது
உடன் இருந்து பிழைதிருத்தம்
செய்து நன்முறையில் அமைய உதவியவர்கள்
தருமையாதீனப் பல்கலைக் கல்லூரிப்பேராசிரியர்,
சிரோமணி, வித்துவான், திரு. வி.
சபேசனார் அவர்கள். இப்புலவர் பெருமக்கள்
அனைவர்க்கும் எனது உளமார்ந்த நன்றி
என்றும் உரியது. இத்திருமுறையைச்
செம்மையாகப் பதிப்பித்துத்தந்த தருமபுரம்
ஞானசம்பந்தம் அச்சகத்தார்க்கும் எனது நன்றி
உரியது.
|