திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஐந்தாம் தொகுதி
1

முகவுரை
 

  சித்தர்க்கும் வேதச் சிரந்தெரிந் தோர்கட்கும் செய்தவர்க்கும்
சுத்தர்க்கும் மற்றைத் துறைதுறந் தோர்கட்கும் தொண்டுசெய்யும்
பத்தர்க்கும் ஞானப் பகவர்க்கு மேயன்றிப் பண்டுசென்ற
முத்தர்க்கும் இன்னமு தம்சட கோபன் மொழித்தொகையே.

(கம்ப நாடர்)

   

திருமகள் கேள்வனான சர்வேச்வரனால் மயர்வற மதி நலம் அருளப்பெற்ற
ஆழ்வாருடைய அருளிச்செயலாகிய திருவாய்மொழியின் ஐந்தாம் பத்திற்கு
‘ஈட்டின் தமிழாக்கம்’
என்னும் பெயரிய உரை எம் குலக்கொழுந்தாகிய
ஆழ்வாருடைய திருவருளால் வெளிவருகின்றது. முன்னர் வெளி வந்த முதல்
நான்கு பத்துகளையும் ஏற்ற தமிழுலகம் இதனையும் ஏற்று அடியேற்கு ஊக்கம்
அளிக்கும் என்பது அடியேன் எண்ணம்.

இவ்வுரையை எழுதிவந்த காலத்தும், பதிப்பித்த காலத்தும் ஆங்காங்கு வேண்டிய உதவிகளைச் செய்த பெரியார்கட்கும் நண்பர்கட்கும் நன்றி செலுத்துதலையுடையேன்.

இவ்வுரையை, சென்னைப் பல்கலைக் கழகத்தார் அச்சிடுதற்குக் காரணராயிருந்த சொல்லின்செல்வர் தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு. ரா. பி. சேதுப்பிள்ளை, B.A., B.L., அவர்கட்கும், தொடர்ச்சியாக வெளியிட்டு உதவிவரும் சென்னைப் பல்கலைக் கழக அதிகாரிகட்கும் நன்றி செலுத்தும் கடப்பாடு உடையேன்.

“குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்
 கற்றறிந்த மாந்தர் கடன்.”

  சென்னை,

}

 இங்ஙனம்
  13-2-1955. பு. ரா. புருஷோத்தம நாயடு