திரிசொற்களைக் கொண்டும், தற்கால வழக்கத்தை அனுசரித்து
இடைக்கிடை சாமான்யமான வடசொற்களைக் கொண்டும்
இயற்றப்பட்டிருக்கிறது.

'தெளிந்த வாசகநடையுள்ள புஸ்தகங்கள் போலச்
செய்யுளிலமைந்த நூல்கள் சுலபமாய்ப் பொருள் விளங்கக்கூடிய
வல்ல; ஆதலின், அவற்றால் அதிகப் பிரயோஜன மிராது' என்று
தற்காலத்தில் இங்கிலீஷ் பாண்டித்யமுள்ள சிலர்
ஆக்ஷேபிக்கவுங்கூடும். அப்படியல்ல, தெளிந்த வாசகம்போலவே
சிறந்த செய்யுளும் அதனதன் ஸ்தானத்தில் சிறப்புந்
தகுதியுமுடையதாம். எப்படியெனில், சாஸ்திரம், சரித்திரம்,
சமாசாரம் முதலிய அறிவு விர்த்திக்குரிய விஷயங்கள் தெளிந்த
வாசகநடையிலிருப்பது சிறப்பும், அவசியமுமாம். வாசக
மெவ்வளவு தெளிவுள்ளதாயினும், சிறந்த செய்யுட்போலக்
கேட்போருள்ளத்தைக் கவரவும், மனதைப் பரவசமாக்கவும்,
எப்போதுஞ் சிந்தையை விட்டகலாமல் அதிற் பதிந்து நீடித்த
பயனை விளைவிக்கவும், போதுமான சக்தியுடையதல்ல.
ஆதலால், எக்காலத்து மறவாமல், மனசில் வைத்து உயிரிலும்
அருமையாய்ப் பாதுகாத்துப் பேணவேண்டிய பக்தி, உணர்ச்சி,
ஒழுக்கமுதலியவற்றிற்குரிய விஷயங்கள் சிறந்த செய்யுளில்
அமைந்திருப்பது சிறப்புந் தகுதியு மாத்திர மல்ல, பிரயோஜனமு
மிகுதியே. தமிழ்ப் பாஷையின் நூல்களைக் கற்றறிந்த சகலரும்
இதற்குச் சாக்ஷி பகருவார்கள். ஆதலால், இப்பிரபந்தம்
செய்யுளிலிருப்பது பக்தி விர்த்திக்கும், நல்லொழுக்கத்திற்கும்
அதிக அனுகூல மென்பது நிராக்ஷேபமாயிருக்கிறது.

தமிழ்ப் பிரதேசத்தில் 'ஜீவக சிந்தாமணி' முதலிய பஞ்ச
காவியங்களும், 'திருக்குறள்' முதலிய நீதி நூல்களும்,
'கம்பராமாயணம்' முதலிய இதிகாசங்களும், 'தேவாரம்',
'திருவாய்மொழி' முதலிய திவ்விய பிரபந்தங்களு மெல்லாம்
எவருந் தெளிவாய்ப் பொருளறிந்து கொள்ளத்தக்க நூல்களா?
அவைகளெல்லாம் உலகத்தில் எவ்வளவு காலமாக நிலை பெற்று,
யாவராலும் அபிமானிக்கப்பட்டு வழங்கிவருகின்றன!
பிரயோசனப்படாமலா போயிற்று? கற்றுவல்ல சான்றோர்
எக்காலத்து முளராகப் பொருள் விரித்துரைக்கின்றனர்.
மற்றையோர் கேட்டு மகிழ்கின்றனர். எக்காலத்தும், யாண்டும்,
இவ் விருதரத்தாரு முளர். அல்லாமல், இங்கிலிஷ் பாஷையிலுள்ள
வாசக நூல்களெல்லாம் எவரும் தாமாய்ப் பொருளறிந்து
கொள்ளத்தக்க நூல்கள்தானா? வித்தியாசாலைகளிற் படித்துத்
தேறுகிற சிறுவர் போகட்டும். B. A. பரீக்ஷை கொடுத்த
கல்விமான்களாவது M. A. பரீக்ஷைக்குக் குறிப்பிட்ட பாடங்களைத்
தாமாய்ப் படித்துக்கொள்ளக் கூடாதா? பிறருதவியை
நாடுவதென்னை? வாசக கிரந்தந்தானே, கிறிஸ்துவேத புஸ்தகம்;
யாவரும் பொருளறிந்து கொள்ளத்தக்க விதமாய்த் தெளிவான
வாசகநடையில்தானே யமைந்திருக்கிறது; அதற்கேன்
வியாக்கியானம் வேண்டும்? 'பட்லர்ஸ் அனாலஜி' என்ற வாசகப்
புஸ்தகம் எத்தகையதென்று அறிவீர்களே. அதுவும்
பிரயோஜனமற்ற நூல்தானா? தாமாய்க் கற்றறிகிற கல்வியறிவிலும்,
தம்மினுங் கற்றுவல்ல சான்றோரால் கேட்டறிகிற கேள்வியறிவுதான்
சிலாக்கியமுடையது. இதுவே சந்தேக விபரீதமில்லாத மெய்யறிவு.
ஆதலினாற்றான் -