உமறுப்புலவர்,

கண்ணினின் மணியே எம்தம்

கருத்துறும் அறிவே; காமர்

விண்ணினிற் குறைப டாமல்

விளங்கிய மதிய மே, இம்

மண்ணினுக்(கு) அரசே! நம்தம்

மனைக்குறு செல் வமே,எம்

புண்ணியப் பலனே என்னப்

பூங்கொடி எடுத்(து) அணைத்தாள்.

எனச் சொல்லோவியமாக்கியுள்ளார். இதே செய்தியை திருமாலிறையன்

புதுமலரே! புண்ணியம்செய்(து) அருள்வழங்கப்

புகுந்தவரே! பொலிந்த வாழ்வின்

முதலவரே! முழுப்புகழின் தண்ணொளியே!

முகம்மதுவே! முத்தே! அன்புக்

கதவதனைத் திறக்க வந்த கனியமிழ்தே

காதல்மனம் கசிந்து காண

இதயமுற வெளித்தோன்றும் நறுமணமே!

எனப்போற்றி ஏத்தி னாரே!

என நயம் கூட்டிப் பாடியிருப்பதை அறிய முடிகிறது.

காப்பிய வேந்தென வாழ்க

புலமை நலம் கொழிக்க ஒரு காவியத்திற்குள்ள எல்லாச் சிறப்புகளுமுடைய
ஒரு பழக்கொத்தாக இக்காவியம் இனிக்கிறது. சீறாப்புராணத் தொடர்
சொற்பொழிவு ஓராண்டுக்கு மேல் சென்னையில் நிகழ்த்தினேன். அப்போது
சீறாவைப் பலமுறை படிக்க வேண்டியிருந்தது. உமறுவின் சீறாவைப் படித்தபோது
நானடைந்த இன்பத்திற்கு எவ்வகையிலும் குறைவில்லாது திருமாலிறையனின்
இவ்வருள்காப்பியம் நெஞ்சையள்ளுகிறது எனப் பெருமையுடன் கூற விழைகிறேன்.
இதுபோன்ற இன்னும் பல காப்பியங்களைச் செய்து கவிஞர் திருமாலிறையன் ஒரு
காப்பிய வேந்தராகப் புகழ்பெற வேண்டுமென வாழ்த்துகிறேன்.

அன்புடன்
சு. செல்லப்பன்