இனிக், குலோத்துங்கனைக் கூறப்புகுவதற்கு முன், பரணிப் போர்

நிகழ்வதற்கான   முற்குறிகளைப்   பேய்கள்   கண்டனவாகப்  ‘பேய்
முறைப்பாடு’ என்னும் பகுதியில் கூறுகின்றார் ஆசிரியர். ஈண்டுப் பேய்களின்
பசிக்கொடுமை    கூறப்படுவது    பெரிதும்    நயஞ்சிறந்த   பகுதியாகும்.
பசித்திருக்கும்  பேய்கள்  சில  நற்குறிகள் கண்டிருப்பதும், இமயத்திலிருந்து
கலிங்கத்தின்  வழிவந்த    முதுபேய்    தான்  கலிங்கத்துக்  கண்ட  சில
தீக்குறிகளைக்  கூறுவதும்,  இவைகளைக்   கேட்டுக்   காளி  கணிதப்பேய்
நனவும் கனவும்  கண்டு  கூறியவாறு,  குலோத்துங்கனால் ஒரு பரணிப்போர்
உண்டெனக் கூறுவதும், பின் நிகழப்புகும் பரணிப்போர்க்கு முன்னறிவிப்பாக
அமைந்து  பெரிதும்  பொருத்தமுற்று  இன்பஞ்  செய்கின்றன.

இனி, ‘அவதாரம்’  என்ற பகுதியில் குலோத்துங்கன் பிறப்பு, வளர்ப்பு,
இளவரசுப் பட்டம் எய்தியது, முடிசூடியது முதலிய செய்திகளை விரிவாகவும்,
அழகு  படவும்   கூறுகின்றார்  ஆசிரியர்.  கலிங்கப்போர்த்  தலைவனான
குலோத்துங்கன்  சிறப்பைக் காளி பேய்களுக்குக் கூறுவதாய் அமைந்துள்ளது
இப்பகுதி.  திருமாலே  குலோத்துங்கனாய் பிறந்தான் என்கின்றார் ஆசிரியர்.
சளுக்கியர்   குலத்துப்   பிறந்ததும்,   தாயின்   குலமாம்  சோழ  குலத்து
அரசுரிமையைப்  பெற்றதும்,  இளவரசாயிருந்தபொழுதே வடதிசை நோக்கிப்
போர்க்கெழுந்து  வெற்றி   பெற்றுச்   சிறந்ததும், அரசன்  இறக்கச்  சோழ
நாடடைந்து  நாட்டை  நிலைபெறுத்தி  முடி  சூடியதும்,  பெருமன்னனாய்ச்
செங்கோலோச்சி  இருந்ததும்  பாலாற்றங்கரைக்கு நால்வகைப் படையுடனும்
தேவியருடனும்  சிற்றரசர்  சூழவும்  புறப்பட்டுச்  சென்றதும், தில்லையிலும்
அதிகையிலும்  தங்கிச்  சென்று காஞ்சியடைந்திருந்ததுமாகிய இப் பகுதியில்
கூறப்படும் பொருள்கள் பயில்வார்க்குக் கழிபேரின்பம் பயக்கின்றன.

இனி,  அடுத்ததான   ‘காளிக்குக்கூளி கூறியது’   என்ற   பகுதியில்,
அங்ஙனம்  காஞ்சியை  அடைந்த   குலோத்துங்கன்  செய்தமைத்த   ஒரு
சித்திரப் பந்தரின் கீழ் அமைச்சர்