முதலியோர்   புடைசூழ   வீற்றிருந்த   சிறப்பும்,  சிற்றரசர்  பலரும்
திறையுடன்  வந்து   அவற்றைச்    செலுத்தி    நின்ற   இயல்பும்,  திறை
செலுத்தாக்  கலிங்க  மன்னன்மேல்  மன்னன்  கட்டளைப்படி  கருணாகரன்
நால்வகைப் படையுடன் போர்க்கெழுந்த இயல்பும், பல ஆறுகளையும் கடந்து
கலிங்கம்  அடைந்ததும்,  ஆண்டுக்  கலிங்கத்தை எரிகொளுவி அழித்ததும்,
அதுகண்ட    கலிங்க    மக்கள்    அரசனிடம்  முறையிட்டதும்,  அரசன்
வெகுண்டெழுந்ததும், அமைச்சன் அரசனுக்கு அறவுரை  புகன்றதும்  அரசன் 
மதியாது   நால்வகைப்   படையுடன்    போர்க்   கெழுந்ததும்    ஆகிய 
செய்திகளைக்,    கலிங்கத்தினின்று    வந்த   ஒரு    பேய்   காளிக்குக் 
கூறுவதாகக்  கூறி  முடிக்கின்றார்   ஆசிரியர்.

இனிப்   ‘போர் பாடியது’   என்னும்   பகுதியில்  அக்கலிங்கப் பேய்
காளிக்குக்  கூறுவதாக  வைத்தே  கலிங்கப்போரின் இயல்பை மொழிகின்றார்
ஆசிரியர்.   ஈண்டு   நால்வகைப்  படையின்  போர்ச்  செயல்கள்  பலவும்
நெஞ்சந்துணுக்குறுமாறு   விரிவாகக்   கூறப்படுகின்றன.   போர்  முதிரவும்,
கருணாகரன்  தன்  களிற்றை முற்பட்டு உந்தவும், இருவகைப் படையும் தாம்
தாம்  ஒரு  முகப்பட்டுப் பொரவும், இருதிறத்து நால்வகைப் படைகளும் பல
அழியவும்,  போரின்  கடுமைக் காற்றாது கலிங்க வேந்தன் மறைந்து ஓடவும்,
அஃதுணர்ந்த கலிங்கர் அழியவும், கருணாகரன் களிறும் செல்வமும் கவர்ந்து
கலிங்க  வேந்தனைப்  பற்றிக்  கொணருமாறு  ஒற்றர்களோடு  படைகளைப்
பணிக்கவும்,   கலிங்க  வீரர்  ஒரு  மலைக்குவடுபற்றி  நிற்பதை  ஒற்றரால்
உணர்ந்த  படை,  மாலை  வேளையில் அக்குவட்டையணைந்து விடியளவும்
காத்து  நின்று, விடிந்ததும் கலிங்கரை அழிக்கவும், கலிங்க வீரர் நாற்புறமும்
உருக்கரந்து   ஓடி   ஒளிக்கவும்,  கருணாகரன்  கவர்ந்த  களிறுகளுடனும்
செல்வத்துடனும்  குலோத்துங்கன்  மருங்கணைந்து பணிந்நு நிற்கவும் உள்ள
செயல்கள்  இப்பகுதியில்  விரிவாகவும் அழகுபடவும் அமைந்துள்ளன.

இனிக் ‘களம் பாடியது’ என்னும்  பகுதியில் போரைச் சொல்லி முடித்த
பேய்,  காளியைக்  களத்தைக்காணுமாறு