அழைக்கக், காளி வந்து, களத்தைக் கண்டு, அக்காட்சிகளைப்
பேய்களுக்குக் காட்டுவாளாய்க் கூறிய அக்காட்சிகளை அழகுபட
மொழிகின்றார் ஆசிரியர்.
காட்சிகளைக் காட்டியபின், நீராடிக் கூழட்டு உண்ணுமாறு
பணிக்கின்றாள் காளி. அங்ஙனமே பேய்கள் பல்துலக்கி, நீராடிக் கூழட்டு
உண்ணும் இயல்பு கூறப்படுவது பெரிதும் வியப்புச் சுவையும் நகைச்
சுவையும் பொருந்தி இன்பஞ் செய்கின்றது.
ஈண்டுப் பேய்கள் பாடும் வள்ளைப்பாட்டில் குலோத்துங்கன் புகழ்
பல கூறப்படுகின்றன.
முடிவில் பேய்கள் தங்கட்குக் பரணிக்கூழ் அளித்த
குலோத்துங்கனை வாழ்த்துவதாகக் கூறிப் பரணி நூலை முடிக்கின்றார்
ஆசிரியர்.
___________
2. குலோத்துங்கன்
குலோத்துங்கன் சளுக்கிய குலத்துப் பிறந்து, சோழர் குலத்தை
விளங்க வைத்துப் பெருவீரனாய்த் திகழ்ந்த பேரரசனாவன். இவன் தந்தை
சளுக்கிய குலத்து இராசராசன்; தாய் கங்கைகொண்ட சோழன் மகளான
அம்மங்கை. இராசராசனும் கங்கைகொண்ட சோழனின் உடன்பிறந்தாள்
மகனேயாவன். இராசராசனின் தந்தையான விமலாதித்தன் கங்கைகொண்ட
சோழனின் உடன் பிறந்தவளான குந்தவையை மணந்தவனேயாதலின்,
இம்மணத்தைக் கங்கைகொண்ட சோழனின் தந்தையான இராசராசனே
இயற்றுவித்தான். இங்ஙனம் இருகுடியும் தொடர்புற்றிருந்ததனாலேயே
கங்கைகொண்ட சோழனின் நான்காம் மகனாகிய வீரராசேந்திரன், தனக்குப்
பின் அரசாளத்தகுந்த நற்புதல்வன் இல்லாமையின், தன் உடன் பிறந்தாள்
மகனான குலோத்துங்கனை இளவரசாக்கினன். குலோத்துங்கனை
அம்மங்கை தன் தாய் வீட்டில் பெற்றெடுத்தனள் என்றும், அப்பொழுது
மகள் வயிற்றுப்
|