'கருணையொ டுந்தன துபய கரமுத வும்பொருள் மழையின்
அரணியமந்திர அனல்கள் அவைஉதவும் பெருமழையே'

எனவும்,

'தாங்காரப் புயத்தபயன் தண்ணளியால் புயல்வளர்க்கும்
ஓங்கார மந்திரமும் ஒப்பில நூ றாயிரமே'

எனவும் வருமாற்றால் இது தெளியப்படும். மேலும்,

'உபய மெனும்பிறப் பாளர்ஏத்த
     உரைத்த கலிங்கர் தமைவென்ற
அபயன் அருளினைப் பாடினவே'

என  வருமாற்றால்  இவன்  புரிந்த பல செயலால் பார்ப்பனர் இவன்
ஆட்சியில்  மகிழ்வெய்தி  இருந்தனர்  என்பது விளங்குகின்றது.

இனி,   இவன்    பல   கலைத்துறைகளையும்   கற்றுக்   கைபோய
பேரரசனாய்த்  திகழ்ந்திருந்தனன்.

'உரைசெய்பல கல்விகளின் உரிமைபல
சொல்லுவதென் உவமைஉரை செய்யின் உலகத்(து)
அரசர்உளர் அல்லரென அவைபுகழ
            மல்குகலை அவை அவைகள் வல்லபிறகே'

என ஆசிரியர் கூறுமாறு காண்க. பின்னரும்,

'பௌவம் அடங்க வளைந்த குடைப் பண்டித சோழன் மலர்க்கழலில்
தெவ்வர் பணிந்தமை பாடீரே'

என  வருமாற்றாலும் இதை உணரலாம். இவனுக்குப் பண்டித சோழன்
எனும்  பேரும்  உண்மை  இதனால்  குறிக்கப்பட்டதாம்.  இவன்  இங்ஙனம்
பண்டித  சோழனாய்  விளங்கியமையின், பல்கலைத்துறையிலும் வல்லார் பலர்
இவன்  அவைக்கண்  வந்து தம்  கல்வியைக்  காட்டலும்,   இவன்   அவர்
தகுதியறிந்து   பாராட்டி   அவர்களைத்   தக்கவாறு   பெருமைப்படுத்தலும்
இயற்கையேயாம்.  காளியின்  திருமுன் தான் கற்ற இந்திரசாலங்களைக் காட்டி
நிற்கும்  ஒரு  முதுபேய் தான் கற்றவை யனைத்தும் எஞ்சாது காணவேண்டும்
எனக்  காளியை  இரந்து  கூறலுற்றுக்,