இனி,   உயர்வுநவிற்சி   அணிகள்   பல   இடங்களில்   அமைந்து,
கூறும்பொருளை  விளக்கமுறுத்தி  இன்பஞ்  செய்கின்றன.  பாலைநிலத்தின் வெம்மைமிகுதியைக் கூறுவார்,

'அணிகொண்ட குரங்கினங்கள் அலைகடலுக் கப்பாலை
மணலொன்று காணாமல் வரைஎடுத்து மயங்கினவே'

எனக் கூறுகின்றார்.  "இராமன்  பொருட்டுக்  கடலுக்கு  அணைகட்டப்
புகுந்த குரங்கினங்கள் வீணே மலைகளை வருந்திச் சுமந்து எடுத்துக்கொண்டு
வந்து முயன்று அணை கட்டினவாம், அப் பாலைநிலத்தின் மணல்  ஒன்றைக்
கடலிடத்தே போட்டால் அக்கடல்  முழுவதும்  வறண்டிருக்குமே!  அறிவற்ற
குரங்குகள்'' என்றார்' ஆசிரியர்.

கலிங்கத்தின்மீது போர்க்கெழுந்த படையின் மிகுதியைக் கூறுவார்,

'பார்சி றுத்தலின் படைபெ ருத்ததோ
படைபெ ருத்தலின் பார்சி றுத்ததோ
நேர்செ றுத்தவர்க் கரிது நிற்பிடம்
நெடுவி சும்பலால் இடமும் இல்லையே'

என்கிறார்.   பரந்த   உலகம்   சுருங்கிப்   போய்விட்டதால்'  படை
பெருக்கமாகத் தோன்றுகிறதோ? அல்லது, படையின்  பெருக்கத்தால்  பரந்த
உலகம்    சிறுத்துத்  தோன்றுகின்றதோ?    நேர்நின்று   போர்புரிபவர்க்கு
வானத்தைத் தவிர வேறிடமே இல்லை என்கிறார்.

படையெழுச்சியைக் கூறுகின்றவர்,

'எழுந்தது சேனை எழலும் இரிந்தது பாரின் முதுகு
விழுந்தன கானும் மலையும் வெறுந்தரை யான திசைகள்'

என்கின்றார்.

இனிச்,   சில   இடங்களில்   முரண்தொடைகளை  அமைத்து அழகு
செய்கின்றார் ஆசிரியர்

(1) 'பொருத ராதிபர் கண்கள்சி வந்தில  போரில்   ஓடிய  கால்கள்சி வந்தன.