முகப்புதொடக்கம்
32 முக்கூடற் பள்ளு

தாழ்த்தும் பிறவிச் சலதியிற் படியா
தேற்றிடும் பரிசின் இலங்குமாக் கூடல்
போற்றிடும் பெரியோர் புக்குவந் துலவும்
இக்கூ டதனால் எய்தும் மறுத்தவிர்
முக்கூடல் என்னும் மூதூர் மேவும்
எழிலார் கமலத்து என்றாய் உலவும்
செழுமையார் அகலத் திருமால் என்னும்
அழகன் புத்தே ளாக வமைத்து
ஒழுங்காத் தந்த உயர்நகர் வளனும்
பண்ணையார் வளனும் பாய்புனல் வளனும்
எண்ணரும் பொங்கரின் எய்திய வளனும்
இவ்வளம் முதலிய இன்புற உதவும்
செவ்வியார் மள்ளர்கள் தேவியர் பள்ளியர்
குரவை இசைத்துக் கூத்தாட் டயர்ந்து
விரவு மதுக்கள் விழைவொடு மாந்தி
இந்திரத் தெய்வதம் போற்றிஎக் காலும்
சிந்தை யின்பிற் றிகழ்தருந் தகைத்தாய்
உள்ளி ஆன்றோர்கள் உரைக்கும் பிரபந்தம்
பள்ளெனப் பகரல் அப் பரிசினைத் தழீஇத்
திருமுக்கூடற் பள்ளியாந் தெரிவையும்
மருதூர்ப் பள்ளி என்னும் மங்கையும்
அந்நகர்ப் பள்ளனுக் கின்னலந் தரூஉம்
பொன்மனை யாகப் பொருத்திமுக் கூடற்
பள்ளென் றொருநூல் பாரெல்லாம் மகிழ்கூர்
ஒள்ளிய விம்மிதம் உரைநலம் அணியார்
கற்பனை யடுக்குக் கட்டுரை மோனை
அற்புத எதுகை அமைத்திடும் பாங்கினுள்
இந்நிலப் புலவர்கள் இதயந் தோன்றா
உந்நதஞ் சிலஅவற் றுண்டவை என்னெனிற்
கறைபட் டுள்ளது கப்பத்து வேழம்
திரிபட் டுள்ளது நெய்ப்படு தீபந்
தனியே நின்றது தாபதர் உள்ளம்
இனிதினிற் கலங்கிய திலகுவெண் டயிர்க்கண்
மாயக் கண்டது நாழிகை வாரம்

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்