கூனிமேட்டிலிருப்பதற்கு உரிமை பெற, மூவாயிரம் வராகன் முன்பணமாகவோ, கடனாகவோ கொடுக்க வேண்டுமென்று செஞ்சிச் சுபேதார் வற்புறுத்தியதாகவும் அவ்வாறே செஞ்சியின் எல்லைக்குள்ளிருந்த பிரெஞ்சு, டச்சு பாக்டரிகளின் தலைவர்களிடமிருந்தும் பணம் கொடுக்க வேண்டுமென்று கேட்ட தாகவும் எழுதப்பட்டிருக்கிறது. இவை தவிர, உள்நாட்டு வியாபாரிகளிடமிருந்தும் வற்புறுத்திப் பணம் பெற்றதாகவும் அத் தினக்குறிப்பில் எழுதப்பட்டிருக்கின்றது. இவ்வாறு பெற்ற பொருளும் செலவுக்குப் போதாமையால், மராட்டியர், தேவனாம் கோட்டையையும் அதைச் சுற்றி, வெடிகுண்டு பாயக்கூடிய விஸ்தீரணம் உள்ள இடத்தையும், ஐரோப்பியக் கம்பெனியார்களுள் யார் பெருந்தொகை கொடுக்க முன்வருகின்றாரோ அவருக்கு விற்பதாகத் தெரிவித்தனர். பிரெஞ்சுக் காரரும் டச்சுக்காரரும் தாமே விலைக்கு வாங்கிக் கொள்ளத் தீர்மானித்து, ஆங்கிலேயர் வாங்காமலிருப்பதற்காக அவர்களிடம் அந்த இடத்தின் மதிப்பைக் குறைத்து வஞ்சகமாகப் பேசிவந்தனர். ஆனால், ஆங்கிலக் கம்பெனியார், தேவனாம் கோட்டை தம் வசத்தில் இருப்பதனால், தமக்கு மிக்க இலாபமும், அதிக உபயோகமும் ஏற்படு மென்று கருதிப் பல நாள் பேரம் பேசிக் கடைசியில் இலட்சத்து எண்ணாயிரத்து நூற்றைம்பது ரூபாய் மதிப்புள்ள 51,500 சக்கரம் (இரண்டே கால் ரூபாய் மதிப்புள்ள தங்கநாணயம்) விலையாகக் கொடுக்கத் தீர்மானித்தனர்.
உடனே கூனிமேட்டின் சுபேதாராகிய சந்தா பல்லாஜி என்பவர், இராமராயரின் பிரதிநிதியாகச் சென்னைக்குச் சென்று மேற்படி கோட்டையையும் அதைச் சுற்றியுள்ள இடத்தையும் விற்பதற்கு ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்து கொண்டார். பிறகு ஆங்கிலேயர் தம் பிரதிநிதிகளாகத் தாமஸ் ஏல், சார்ல்ஸ் பார்வெல் என்னும் பெயருள்ள இருவரை இராமராயரிடம் அனுப்பி, முறைப்படி பர்வானாவைப் பெற்றுவரச் செய்தனர். இராமராயர் 1690-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதக் கடைசியில், பர்வானாவை ஆங்கிலேயருக்கு அளித்தார். அதன்படி தேவனாம் கோட்டையும் அதைச் சுற்றிலுமுள்ள இடமும் ஆங்கிலேயருக்குச் சொந்தமாயின. அவற் |