அம்மணியம்மாள் தம் வயிற்றில் ஓர் ஆண் குழந்தை பிறந்தால்
கருப்பண்ணசாமி பெயரையே வைப்பதாக வேண்டிக்கொண்டார். 
ஒரு பிராமணக் கிழவரும் அவருடைய மனைவியும் இராமேசுவரத்துக்குத் 
தீர்த்த யாத்திரை போய்த் திரும்பி வருகின்றனர். அவர்கள் ஏட்டைப் 
பார்த்து அக்ரகாரத்துக்குப் போகும் வழி கேட்டனர். அக்ரகாரத்துக்கு 
அவர்களை அழைத்துச் சென்றார். அங்கே ஆசாரசீலரான ஓர் அந்தணர் 
வீட்டில் ஆகாரம் செய்வித்து அவர்கள் முகம் கோணாதபடி உபசரித்தார். 

பிள்ளையவர்களுக்கு ஆண் சந்ததி இல்லாக் குறையைக் கேள்வியுற்று, 
தாம் இராமேசுவரத்தில் இருந்து கொண்டுவந்த பூ, விபூதி, குங்குமம் முதலிய
பிரசாதங்களில் கொஞ்சம் தனியே எடுத்து மடித்துக் கொண்டு, ஏதோ 
மந்திரம்போல் தமக்குள் உச்சரித்துவிட்டு, "இந்தாருங்கோ பிள்ளைவாள்!  
இது இராமேசுவரப் பிரசாதம். நான் சொல்லுவது இராமநாதனுடைய வாக்கு. 
தெய்வ வாக்கு. உங்கட்கு இந்தப் பிரசவத்தில் நிச்சயமாக ஆண் குழந்தை 
பிறக்கப் போகிறது; சிறந்த அறிவாளியாகவும் நிறைந்த ஆயுள் உடையவனாகவும்
விரிந்த புகழ் உடையவனாகவும் உம் மகன் விளங்குவான். அவனுக்கு நீங்கள்
இராமலிங்கம் அல்லது இராமநாதன் என்று பெயரிட்டு மிகவும் நலமாக 
வளர்த்துச் சிறப்படையுங்கள்" என்று வாழ்த்துரைத்துப் பிரசாதத்தையும் 
கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட வெங்கட்ராமப் பிள்ளை மிகவும் மகிழ்ச்சி
அடைந்தார்.

அங்ஙனமே வெங்கட்ராமப் பிள்ளைக்கும் அம்மணி அம்மாளுக்கும்
அருந்தவப் புதல்வராகச் சர்வதாரி ஆண்டு ஐப்பசி மாதம் ஐந்தாம் நாள் 
(19-10-1888) வெள்ளிக்கிழமை சுக்லபட்சம் பௌர்ணமி இரவு 12.22 மணிக்கு
அழகியதோர் ஆண் குழந்தை பிறந்தது.