இப் பாடல்களில் எத்தனை ஓட்டம்! எத்தனை பொருட்செறிவு!
கவிஞரின் பாடல்கள் எல்லாமே இப்படித்தான். இன்றைய 
இளங்கவிஞர்களுக்குக் கவிஞரின் பாடல்கள் வழிகாட்டியாக விளங்குகின்றன.

1934 முதல் 1944 வரை சேலம் மாவட்டக் கழக உறுப்பினராகப்
பணியாற்றினார். 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 10ஆம் நாள் சென்னை 
மாநகராட்சி மன்றம் வரவேற்பளித்துப் பணமுடிப்பு வழங்கியது. 1949ஆம் 
ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் நாள் சென்னை அரசாங்கத்தாரால் 
ஆஸ்தானக் கவிஞராக நியமனம் செய்யப்பெற்றார். 1954இல் டில்லி 
சாகித்திய அகாடமியின் நிர்வாகக்குழு உறுப்பினராக நியமனம் பெற்றார்.
1956இல் சென்னை அரசாங்கத்தால், எம்.எல்.சி.யாக நியமிக்கப்பெற்றார்.
1971இல் இந்திய அரசாங்கத்தின் "பத்ம பூஷன்" பட்டம் பெற்றார்.

அண்ணாவும் நாமக்கல் கவிஞரும்

1947ஆம் ஆண்டு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள்
நாகர்கோவிலில் காந்தியடிகள் நினைவாக நினைவுத் தூண் ஒன்று நிறுவி
அதனை அந்நாளைய தமிழக முதல்வர் திரு. குமாரசாமிராசா அவர்களைக் 
கொண்டு திறக்கச் செய்தார். அன்று மாலை நிகழ்ச்சிக்கு நாமக்கல் கவிஞரைத்
தலைமை வகிக்கச் செய்து அவரது தலைமையில் பேரறிஞர் அண்ணா 
அவர்களைச் சொற்பொழிவு ஆற்றச் செய்தார். பேரறிஞர் அண்ணாவும் 
நாமக்கல் கவிஞரும் அன்றுதான் நேருக்கு நேர் சந்தித்து அளவளாவினர்.
"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்று பேரறிஞர் அண்ணா
அவர்கள் நாமக்கல் கவிஞருக்குப் புகழாரம் சூட்டினார்.