அப்பெருமக்கள் மொழிந்த பொன்னுரைகளே தமிழ் நெஞ்சங்களை
விழிப்புற வைத்தன.

அவர்களை நினைந்து நன்றி பாராட்டுகிறேன்.

இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகளைத் தேடும் 
பணியில் ஈடுபட்டபோது, பத்திரிகையாளர் பலரும் உதவினர். ஏடுகளில் இடம்
பெறாத கவிதைகளைத் தங்கள் நினைவிலிருந்து எழுதி உதவிய திரு.த.ஜெயகாந்தன்,
திரு.ஏ.எல்.நாராயணன், பழைய ஏட்டுப் படிகளை அனுப்பி வைத்த இலங்கை 
நண்பர் திரு.கே.கணேஷ் ஆகியோர்க்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

21.09.1924இல் பிறந்து 29.03.1965இல் மறைந்த நம் கவிஞரின் 
75ஆம் ஆண்டு பிறந்த நாளை நினைவூட்டும் வகையில் 1998இல் தமிழ்நாடு 
கலை இலக்கியப் பெருமன்றத்துடன் இணைந்துப் பவளவிழாவினைக்
கொண்டாடினோம்.

1999 தொடங்கிப் புதுவை அரசாங்கம் கவிஞருக்குப் பிறந்தநாள் 
விழா எடுத்து வருவதும் மனநிறைவைத் தருகிறது.

இந்த நிலையிலும், ஒரு கவிதை நூலை வெளியிட்டு விற்று முடிக்கப்
பத்தாண்டுகள் ஆகும் நிலை, என்னுடைய முயற்சிகளுக்குத் தடையாக 
இருப்பதுடன், கவிஞர் பேரால் அறக்கட்டளை நிறுவும் நோக்கத்திற்கும் 
இடையூறாக இருந்து வருகின்றது.

இந்த நூல் முற்றிலும் புதிய பதிப்பு. முன்னர் வெளிவந்த 
தொகுப்பு நூலில் இடம்பெறாத கவிதைகள் பல இத்தொகுப்பில் 
சேர்க்கப்பட்டுள்ளன.

நூலுக்குப் பெருமை சேர்க்கும் நோக்கில், சான்றோர் உரையும்
இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், கவிதை உருவான காலத்தைக் குறிக்கும் ‘படைப்புப் 
பட்டி’யலும், பண்பு வாரியாகக் கவிதைகளை அறிய உதவும் பொருளடக்கமும் 
இடம் பெற்றுள்ளன.

நூல் அச்சேறும் முன் ஒளிஅச்சுப் படியினைச் சரிபார்த்து உதவிய
பேராசிரியர் திருமதி. வெ. கனகசுந்தரம் மற்றும் கவிஞர் காவிரி நாடன்
ஆகியோர்க்கும் நன்றி கூறுகிறேன்.

தமிழ் மக்கள் நூலினை விலை கொடுத்து வாங்கி ஆதரிக்குமாறு
பணிவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.

அன்புடன்,
செ.து. சஞ்சீவி
(தொகுப்பாசிரியர்)