வளர்ப்பு மகன்

தாய் தந்தையரை இழந்த குழந்தையை அத்தை தாலாட்டுகிறாள். பெற்றோர் இல்லாத குறையைப் போக்கத் தன்னையே அவனுக்குத் தாய் என்று கூறிச் செல்லமாகக் கொஞ்சுகிறாள்.

  ஆத்திலே வண்ட லோட
அக்கரையில் கதிர் மறைய
மாலை மசுங்கையிலே
மாமரம் சோலையிலே

அண்ணன் மகனே நீ
அருமையான மருமகனே
எனக்குமே மகந்தாண்டா
என்னருமை பாலகனே

பெத்தவன் ஆத்தோட
பேரு வச்சான் உசுரோட
கத்தவனே உவராஜா
கண்ணே நீ கண்ணுறங்கு

கண்ணுறங்கு

ஆராரோ ஆரிரரோ-சாமி
ஆறு லட்சம் வண்ணக் கிளி,
செம்பவளத் தொட்டிலிலே-என்
சீராளா நீ தூங்கு
பச்சை வண்ணக் கட்டிலிலே
பாலகனே நீ தூங்கு
குருத்து வாழை போல-தொட்டிலிலே
குதித் தாடும் பாலகனே
மாம்பழ மேனியனே
மயங்கி நீ கண்ணுறங்கு

 

மேலிரண்டு பாடல்களை
சேகரித்தவர்:
S.
சடையப்பன்

இடம்:
அரூர் வட்டம்,
தருமபுரி மாவட்டம்.