பக்கம் எண்: - 148 -

வளம் முதலான எல்லாச் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகின்றன. “தமிழே! உன்னை நம்பியே நான் உயிரோடு இருக்கிறேன். இல்லையானால், தேவர்களின் அமிழ்தமே ஆனாலும் விரும்பமாட்டேன்.”

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்து அமிழ்தம் என்றாலும் வேண்டேன்

என்னும் அடிகள் காதலியின் சொற்களாக அமைந்தாலும் புலவரின் தமிழ்ப் பற்றையே காட்டுகின்றன. இவ்வாறு தூது நூல்களின் பல பகுதிகள் பொருட்சிறப்பு மிகுந்தனவாக உள்ளன. அக்காலத்துப் புலவர்களின் வழக்கப்படி இடையிடையே சிலேடைகளை அமைத்து அவற்றில் சொல்நயம் காண வைத்துள்ளனர். இக்காலத்தில் சிலேடை நயங்கள் கவிதைச் சிறப்புக்கு அப்பாற்பட்டவைகளாகவும் தேவையற்றவைகளாகவும் கருதப்படுவதால், அவற்றை இன்று விரும்பிக் கற்பது குறைந்துவிட்டது.