பெருமையால் தம்மை ஒப்பார் |
பேணலால் எம்மைப் பெற்றார் |
ஒருமையால் உலகை வெல்வார் |
ஊனமேல் ஒன்றும் இல்லார் |
அருமையாம் நிலையில் நின்றார் |
அன்பினால் இன்பம் ஆர்வார் |
இருமையும் கடந்து நின்றார் |
இவரை நீ அடைவாய் என்று. |
அடியார்களின் அன்பை விளக்கும்
இடங்களில் சேக்கிழாரின் சொற்கள் மென்மை பெற்றுக்குழைகின்றன. அவர்களின் நெஞ்சில்
உறுதியை விளக்கும் இடங்களில் வன்மை பெற்று இறுகுகின்றன.
காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம்
கேட்ட வரம் பற்றிய பாட்டு, அவருடைய உள்ளத்தின் உண்மையார்வத்தைப் புலப்படுத்தும்
பான்மை போற்றத்தக்கது;
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார |
பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல்
உன்னை என்றும் |
மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டும்நான்
மகிழ்ந்து பாடி |
அறவா நீ ஆடும் போதுஉன் அடியின்கீழ் இருக்க
என்றார். |
என்றும் மாறாத இன்பம் தரும் அன்பு வேண்டும்
என்று கேட்டாராம். பிறவி எடுக்காத வரம் கேட்டாராம்; மறுபிறப்பு நேர்வதாக இருந்தால்,
கடவுளை என்றும் மறக்காத பிறப்பாக இருக்க வேண்டும் என்றாராம்; மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டே,
ஆடும் கடவுளாகிய சிவனுடைய திருவடியின்கீழ் இருக்கவேண்டும் என்று கேட்டாராம். இவ்வாறு
செய்திகளை முறையே சொல்லும் பாடல்களிலும் ஒருவகை உருக்கமும் பண்பாடும் புலப்படக்
காண்கிறோம்.
சேக்கிழாரின் இயற்கை வருணனைகளிலும்
மற்ற வருணனைகளிலும் பக்திச் சுவையே மேலிட்டு விளங்கும். வயலில் விரிந்து அசையும்
நெற்கதிர்கள் சிவனடியாரின் மனம்போல் மலர்ந்து அழகாக உள்ளனவாம். முற்றிய நிலையில்
அந்த நெல்கதிர்கள் தலைவணங்கிச் சாய்ந்து தோன்றும் காட்சி, சிவனடியார்கள் கூடியிருக்கும்போது
ஒருவரை ஒருவர் வணங்கிப் பக்தி செலுத்துவதுபோல் உள்ளதாம். தாழை மலர்களில் மகரந்தப்பொடி
மிகுதி; வண்டுகள் அந்த மலர்களின் பொடியில் குடைந்து ஒலிக்கின்ற காட்சி, சிவனடியார்கள்
திருநீறு பூசிச் சிவனை ஏத்துவதுபோல் உள்ளதாம். மலர்கள் கொத்துக் கொத்தாகப் பூத்துத்
தொங்கும் கொன்றை மரம், சடைகளை உடைய சிவபெருமான்போல் தோன்றுகிறதாம்.
பெருஞ்சினம் கொண்டு எதிர்த்த சிறந்த
வீரனுக்குமுன் பகைவர் எல்லோரும் கெட்டொழிதல், மெய்ஞ்ஞானம் தோன்றியவுடன் மோகம்
|