xii

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

இருளுள் புகைபோல் ஒளிமழுங்கியது. பாவாணரின் விடாமுயற்சியோ, அதனை மீண்டும் புகையுள் தீப்போல் ஒளி சேர்த்தது. . . .

தன்மானத் திறவுகோலைக் கொண்டுதான் அறிவுப்பூட்டைத் திறக்க முடியுமொன்று கண்ட மொழி வரலாற்றுப் பேராசிரியராகிய இவர், இத்தகைய போலித் தன்மைகளைக் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை, இவர் கண்டது தமிழ்; கேட்டது தமிழ்; உண்டது தமிழ்; உயிர்ப்பது தமிழ்; கொண்டது தமிழ்; கொடுப்பது தமிழ்; விண்டது தமிழ்; விளக்குவது தமிழ் என்று தமிழே என்பாகவும், தசையாகவும், குருதியாகவும் வாய்க்கப்பெற்ற தமிழின் முழு உருவம் பாவாணர் என்னில் வியப்படையவும் வேண்டா; மிகையென்று கருதிவிடவும் வேண்டா; இவரின் அளப்பரிய தமிழாற்றலைத் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இவர் நூல்களை அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக்காக்கும் அரிய ஒளிஞாயிறாகும். வீழ்ந்துபட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது. மறைமலையடிகளால் தோற்றுவிக்கப் பெற்று, இவரால் பேணிக் காக்கப்பெற்ற தனித்தமிழ் இயக்கம், செழிப்படைய அடையத்தான் தமிழ்மொழி துலக்கமுற்று விளங்கும். அப்பொழுதுதான் தமிழ் அறிவியல் மொழியாகவும், வாழ்வியல் மொழியாகவும் வளம்பெறும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய தென்மொழி இலக்கணப் புலமையும், சமற்கிருதம், கிரேக்கம், இலத்தினம், உருது, இந்தி, ஆங்கிலம் முதலிய வடமொழி இலக்கணப் புலமையும், ஒருங்கே கைவரப்பெற்ற மொழியியல் ஞாயிறான இவர், தமிழகத்தை விளங்கிக் கொண்டுள்ள அளவுக்குத் தமிழகம் இவரை விளங்கிக் கொள்ளுமானால், பயன்படுத்திக் கொள்ளுமானால் தமிழுக்கு என்றும் அழிவில்லை. தமிழினத்துக்கும் என்றும் வீழ்ச்சியில்லை.

தொல்காப்பியர், திருவள்ளுவர் ஆகிய பெருமக்களுக்குப் பின், தமிழ்மொழியின்மேலும், அதன் வரலாறு, இனம் ஆகியவற்றின் மீதும், அடர்த்துப் போர்த்து நின்ற அறியாமைக் காரிருளைத் தம் அறிவாண்மையால் அடித்து விரட்டிய தனித்தமிழ்க் கதிரவன், ஒளிப்புலன் ஞாயிறு, செம்புலச் செம்மல், தீந்தமிழ்ப் பேரொளிக் கோளம் பாவாணர் ஆவார். தென்புல மக்கள் தங்கள் வாழ்வு நலன்களை நாடிச் சிறிது, சிறிதாக முன்னேறுவதற்குத் தம் தெள்ளிய அறிவாலும், ஒள்ளிய ஆய்வுத் திறனாலும், பேரொளி உமிழ்ந்த பெருங்கதிர் ஞாலம், தமிழின வாழ்வில் ஒரு பேரூழி பாவாணர் ஆவார்.

தொல்காப்பியருக்கு இல்லாத தொகைச்சொல் அறிவும், திருவள்ளுவருக்கு இல்லாத தீந்தமிழ் வரலாற்று அறிவும், தேவநேயமாய் முகிழ்த்துத் தமிழினம் தவறவிட்ட மொழித்தடம் காட்டி, வழிநடை தோற்றிப் புது வரலாறாய்ப் புதுக்கிக் கொடுத்த ஊழிப்பேரொளி பாவாணர் ஆவார்.

பெருஞ்சித்திரன்