பாவாணரைப் போற்றும் பார் xvii
வாயிலாகப் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்; அல்லது நாடாப்பதிவில் தம் வேர்ச்சொல் லாராய்ச்சியை அப்படியே பதிவு செய்திருக்க வேண்டும்.
அப்படிச் செய்யாமையால், பாவாணரது அரிய உழைப்பு, வாழ்நாள் முழுவதும் அவர் செய்த ஆராய்ச்சி, எந்தச் சொல்லுக்கு எந்த வேர், என்ன வளர்ச்சி, என்ன வரலாறு என்றுள்ள பல குறிப்புகளையும் நாம் உணரமுடியாமல் போய்விட்டது.
இன்று வெளிவரும் ‘செ.சொ.பி அகரமுதலித் தொகுப்புகள்‘ பாவாணரின் அகரமுதலிகள் அல்ல. பாவாணவர் வழியில் வெளிவரும் தொகுப்புகளே. இன்றுள்ள ஆய்வாளர்கள் கடுமையாக உழைத்தாலும் பாவாணரின் ஆராய்ச்சிச் செல்வம் தாங்கிய தொகுப்புகளாக அவை இல்லை என்ற மனக்குறை எனக்குண்டு.
இந்தப் படைப்புகள் இவ்வளவு நேர்த்தியாகவும், சிறப்பாகவும், செம்மையாகவும் வருவதற்குத் துணைநின்ற பெருந்தகை, பெரும்புலவர் அ.நக்கீரன் அவர்களைப் போற்றுகிறேன்.
இலக்கிய இலக்கண அறிவும், தனித்தமிழ்ப் பற்றும், பிழையின்றி நூல் பதிப்பிக்கும் ஆற்றலும், அகரமுதலித் தொகுப்பில் முன்பின் மாட்டேறுகளைத் தவறவிடாத நுட்பமும், உழைப்புத் திறமுங் கொண்ட இப் பெருந்தகையின் உழைப்பு நூல் முழுதும் மிளிர்வதை என்னால் உணர முடிகிறது.
எனினும் அந்த வழியில் பணிகளை வேகமாக முடிக்கும் - முடுக்கிவிடும்-வாய்ப்பு எனக்குக் கிட்டியது என்பதொன்றே மனநிறைவளிப்பதாகும்.
இன்னும் சில ஆண்டுகளில் ‘செ.சொ.பி.அகரமுதலித் திட்டம்‘ நிறைவுபெறும். அதற்கு முன்னோ, பின்னோ வரும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆராய்ந்து வளம் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.
1940-ல் ‘ஒப்பியன் மொழிநூலில்‘ பாவாணர் இப்படி எழுதினார்: "நூற்றுக்குத் தொண்ணூறு தற்குறிகளும் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையான மூடக்களஞ்சியங்களும் பகுத்தறிவில்லா உருவேற்றிகளும் குடிகொண்ட இந் நாட்டில் மொழிநூலைப்பற்றித் தவறான கருத்திருப்பதில் வியப்பொன்றுமில்லை" என்றார்.
61 ஆண்டுகளுக்குப்பின் பாவாணர் தம் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதா? ஏற்பட வில்லையென்றால் என்ன கரணியம்?
இப்போது நாம் செயத்தக்கது என்ன?
அன்பு நண்பர் இளவழகன் இலக்கக் கணக்கான உருபா செலவிட்டுப் பாவாணரது அனைத்துப் படைப்புகளையும் கொண்டுவந்து விட்டார். அதிலும் கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியான அழகான படைப்புகள்.
காலத்திற்கும் அழியாத கற்கண்டுக் கட்டிகள்!
அவர் வரலாறு படைத்துவிட்டார்!
நாம் என்ன செய்யப் போகிறோம்?
ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் பாவாணர் நூல்கள் இடம் பெறட்டும். பாவாணரது கருத்துகள் உரம் பெறட்டும்.
வாழ்க பாவாணர் புகழ்!
இளவழகன் உழைப்புக்கு உளம் நிறைந்த பாராட்டு.

முனைவர்.மு.தமிழ்க்குடிமகன்