இப் பாடல் இராமலிங்க அடிகள் பாடிய திருவருட் பாவிலுள்ளது. "நீலா! இப் பாட்டில்
தேகம் என்னும் வடசொல்லை நீக்கி யாக்கை என்னும் தென்சொல்லை யமைத்திருந்தால்
எத்துணை இன்னோசையாகவும் தூய தமிழாகவும் இருக்கும்! இங்ஙனம் அயற்சொற்களை ஆள்வதனால்,
இன்னோசையும் தூய்மையும் கெடுவதுடன் நாளடைவில் தமிழ்ச்சொற்களும் ஒவ்வொன்றாக
வழக்கொழிந்து போகின்றனவே" என்று மகளிடம் கூறி வருந்த, அம் மகளும் "அப்பா!
அப்படியானால் இனிமேல் நாம் தனித் தமிழிலேயே பேசுவோம்" என்று தம் ஆர்வத்தைத்
தெரிவித்தார். அடிகள் அதனை மெச்சி அன்றே சுவாமி வேதாசலம் என்னும் தம் பெயரை
மறைலையடிகள் என்று மாற்றி, அன்று முதல் தனித்தமிழிலேயே பேசவும் எழுதவும் தலைப்பட்டார்.
மறைமலையடிகள் தாம் வெளியிட்ட ஞானசாகரம் இதழை அறிவுக்கடல் என்று
மாற்றினார்; தாம் எழுதிய நூல்கள் மறுபதிப்புக் கண்டபோது வடசொற்களை மாற்றித்
தக்க தமிழ்ச்சொற்களைப் பெய்து வெளியிட்டார்; இந்தியெதிர்ப்புப் போரிலும்
தலைமைதாங்கி வழிகாட்டினார்.
தனித்தமிழ் எழுச்சி தமிழகம் முழுவதும் வீறுகொண்டு எழுந்தது. பலர் தம் பெயர்களைத்
தனித்தமிழாக மாற்றிக்கொண்டனர். சிலர் மாற்றிக் கொண்ட பெயரும் தமிழாக
இல்லை. ஒருசிலர் தமிழுக்காகப் போராடினர். ஆனால் தம் பெயரைத் தமிழாக
மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.
தனித்தமிழ் இதழ்கள்
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழம், மீட்போலை, தமிழியக்கம்,
செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில், குறளியம் போன்ற இதழ்கள் தனித்தமிழ்
பரப்பி வருகின்றன.
நூலாசிரியர் பாவாணர்
பாவாணர் பாட்டனார் முத்துச்சாமித் தேவர் தஞ்சை மாவட்டத்து
நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர்; சங்கரன்கோவிலில் இருந்த தோக்கசு என்னும் மேனாட்டுக்
கிறித்தவக் குரவரின் வளமனைக் காவற்காரனாகப் பணியாற்றினார். இவர் மகன் ஞானமுத்து.
அவருக்குப் பிறந்தவரே நம் நூலாசிரியர் ஞா.தேவநேயர்.
மாந்தன் பிறப்பிடம் குமரிக்கண்டம் என்பதிலும், ஞால முதன்மொழி தமிழ்
என்பதிலும் அசைக்கமுடியாத முடிவு கொண்டிருந்தார். இவற்றை நிலைநாட்டும் பொருட்டு
முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். சேலம் நகராண்மைக் கல்லூரியின்
முதல்வராய் இராமசாமிக் கவுண்டர் பணியாற்றினார்.