சரிதை எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும், நீங்கள்
என்னதான் எழுதுவீர்கள் ? உங்கள் கொள்கைகள் என்று நீங்கள்
இன்று கொண்டிருப்பவைகளை நாளைக்கு நிராகரித்து விடுகிறீர்கள்
என்று வைத்துக் கொள்ளுவோம். அல்லது, இன்று நீங்கள்
வைத்திருக்கும் திட்டங்களை நாளைக்கு மாற்றிக் கொள்ளுகிறீர்கள்
என்றும் வைத்துக் கொள்ளுவோம்.அப்போது, நீங்கள் பேசியவை
அல்லது எழுதியவைகளை ஆதாரமாகக் கொண்டு தங்கள்
வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இருப்பவர்களுக்குத் தவறான
வழியைக் காட்டிவிட்டதாக ஆகிவிடாதா? சுயசரிதை போன்ற ஒன்றை
இப்போதைக்காவது எழுதாமலிருப்பது நல்லதல்லவா? என்று அவர்
கேட்டார்.
இந்த வாதத்தில் ஓரளவு உண்மை இருக்கிறது என்பதை
உணர்ந்தேன். ஆனால், உண்மையில் சுயசரிதை எழுதுவது என்பதல்ல
என் நோக்கம். நான் நடத்தி வந்திருக்கும் சத்திய சோதனைகள்
பலவற்றின் கதையைச் சொல்லவே விரும்புகிறேன்.என் வாழ்க்கையிலும்
இந்தச் சோதனைகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை.
ஆகையால், இக்கதை ஒரு சுயசரிதையாகவே அமையும் என்பது
உண்மை. ஆனால், அதன் ஒவ்வொரு பக்கமும் என்னுடைய
சோதனைகளைப் பற்றி மாத்திரமே கூறுமானால், அதைக் குறித்து நான்
கவலைப்படமாட்டேன். இந்தச் சோதனைகள் அனைத்தையும் பற்றிய
தொடர்ச்சியானதொரு வரலாறு வாசகர்களுக்குப் பலனளிக்காமற்
போகாது என்று நம்புகிறேன்; அல்லது அந்த நம்பிக்கையுடன் என்னை
நானே பாராட்டிக்கொள்ளுகிறேன். ராஜீயத்துறையில் நான்
செய்திருக்கும் சோதனைகள், இந்தியாவுக்கு மாத்திரமல்ல, ஓரளவுக்கு
‘நாகரிக’ உலகத்திற்கும் இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன.
என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை
எனக்குத் தேடித் தந்திருக்கும் ‘மகாத்மா’ பட்டத்தையும் நான்
மதிக்கவில்லை. அப்பட்டம் எனக்கு எப்பொழுதும் மன
வேதனையையே தந்திருக்கிறது. அப்பட்டத்தினால் நான் எந்தச்
சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக எனக்கு
நினைவு இல்லை.ஆனால், ஆன்மிகத் துறையில் நான் நடத்திய
சோதனையைப் பற்றிச் சொல்லவே நிச்சயமாக விரும்புவேன். அவை
எனக்கு மாத்திரமே தெரிந்தவை. ராஜீயத் துறையில் வேலை செய்து
வருவதற்கு எனக்கு இருந்து வரும் சக்தியையும் நான் அதனிடமிருந்தே
பெற்றிருக்கிறேன். இந்தச் சோதனைகள்
|