பக்கம் எண் :
 

க. எழுத்தியல்


2. நூற்பா:

      பொருளும் கருத்தும் புலப்படுத் துஞ்சொல்
      திரளும் வகையினும் பிரியும் வகையினும்
      தனித்தனி ஒலியுடை யனஎழுத்(து); அவையே
      வளிப்புக உப்பும் உறையென வரியோ (டு)
      ஒலிப்பட உருப்பெறும் ஒப்பில் தமிழிலே.

    பொருளுரை: உருவப் பொருள்களையும் அருவக் கருத்துகளையும்
தெரிவிக்கும் சொல்லாகத் திரள்வதும் பிரிவதும் ஆய் இயங்கும் வகையில்
தனி முழுத்தன்மை ஒலியுடையனவே எழுத்துகள்.  அவ்வாறே தமிழ்
எழுத்துகள் தொய்வைத் தலையணை, மிதிவண்டி உட்குழல் போன்ற
உறைகள் காற்றூட்டப்பட்டுச் செயற்காதல் போல வரிவடிவங்கள்
குறிவடிவங்களாக ஒலித்துரைக்கப்பட்டு இயலும் என்பது.


    விரிவுரை: சொல்வழி எழுத்தை உணர்த்தியது புதிய மொழிப்
பயிற்றியல் முறையில் சொற்பயிற்சிக்குப் பின்னே எழுத்துக்கூறு
உணர்த்தப்படுவது போல்வது.  பிரியும் வகையில் எழுத்தென்றது
எழுத்துமலரால் தொடுத்த சொல்லாய மாலை எழுத்துக் கூட்டிப் பிரிப்பினும்
கலப்புச் சிதைவில்லாமை.

    தனித்தனி ஒலியுடையன எழுத்து என்பது, The - தி என்னும் ஆங்கில
முறைபோல் அசையொலி அன்றித் தனியொலி - தன்போல் வடமொழியும் -
கொள நின்றது தமிழ் என்பது குறிக்கும்.  ஈற்றீரடிகளான் எழுத்து என்னும்
சொற்பொருள் கையால் எழுதப்படுவது பற்றியதோ வாயால் எழுப்பப்படுவது
பற்றியதோ என்னும் ஐயத்தில் ‘கூட்டி எழுஉதல் என்மனார் புலவர்’ (6)
என்ற தொல்காப்பியப்படி எழுப்பப்படுவதே எழுத்தென முற்கண் இருந்து
பின் தலைமுறை தோறும் மொழிபயில் சிறார்க்கு விளங்குமாறும் நூல்
நிலைபேற்றிற்குமாக எழுதப்படும் வரிவடிவம் அடையாளமாக்கப்பட்டது
என்னும் வரலாற்றை உணர்க.

ஒலியெழுத்து

3. நூ: உயிர், மெய், ஆய்தம் உயிர்மெய் நான்கே
      உயிர்நேர் தமிழின் எழுத்து வகைமை.

    பொ: ‘அ’ முதல் ஒள வரைப்பட்ட உயிர் பன்னிரண்டும், க் தொடங்கி
ன் ஈறாய மெய் பதினெட்டும், ஆய்தம் ஒன்றும் மெய்