பக்கம் எண் :
 
New Page 1

    குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம்,
உயிரளபெடை, ஐந்தும் உயிரினின்று தோன்றுவதும் - மகரக்குறுக்கம்,
ஒற்றளபெடை இரண்டும் மெய்யினின்று தோன்றுவதும்; உயிர்மெய்
இரண்டினின்று தோன்றுவதும் ஆய் முதலினின்று தோன்றின.  ஆய்தம்
முதலைச் சார்ந்துவருவது.

    நாம் சுருக்கியவாற்றான் உயிர்மெய் தோன்றியும் ஆய்தம் சார்ந்தும்
வரும் என்க.  நூல்களின் சார்பெழுத்து வகையினை விரிமுறையில்
காண்பாம்.

குற்றியலுகரம் - குற்றியலிகரம்

360. நூ: தொல்காப்பியமுதல் அனைத்தும் கூறிய
        குன்றியலுகரம் இன்றொலி நிரம்பி
        புணர்ச்சிக் கொன்றே பயன்படல் உடைமையின்
        தனித்திடல் வேண்டா; யாவரின் இய்யுறும்
        குற்றிய லிகரமும் பொதுப்புணர் வுட்படும்.

    பொ: சார்பெழுத்தினைப் பலவாறு கூறினும் எல்லா நூல்களிலும் விடாது
கூறிய குற்றியலுகரம் இந்நாள் வழக்கில் ஒலி நிரம்பிப் புணர்ச்சிக்கு மட்டில்
பயன்படுமாறு இருத்தலின் தனித்து ஒருவகையாய்க் கூறல் வேண்டுவதில்லை;
மற்று, இக்குற்றியலுகரத்தின்பின் யாவரின் ‘இ’ ய்யாக மாறும் குற்றியலிகரமும்
பொதுவான புணர்ச்சித் திறத்துள்ளே அடங்கும். (ஒலி நிரம்பிய இயல்பு
உகரத்தை முற்றியலுகரம் என்பது இதன் மேலமைந்த பெயரளவு வேறுபாடு).

    குற்றியலுகரவிரிவை முற்காண்க.  நுந்தை என்னும் காப்பியர் காலத்துக்
குற்றியலுகரம் நுங்கு, குருகு, முதலன முன்குன்றாமையின் நன்னூலார்
விலக்கியது காண்க.

    இன்று ஒலி நிறைந்திருத்தல் புணர்ச்சி வேறுபாட்டானறிக.

    ஓடம்போக்கு + யாறு =ஓடம்போக்கியாறு எனத் திரிதல் போல்வன. 
முதலாம்+யாண்டு=முதலாமியாண்டு என்றும் வருதலின் இதனையும்
குற்றியலிகரமென்றுரைத்தல் வேண்டும்.  அவ்வாறு நூற்கூற்று இன்மையால்
இவை சார்பாகா என்றது.  மேலும் குற்றியலுகரம் அல்லன முற்றியலுகரம்
என்பதுபோல் முற்றியலிகரமும் இன்மை அறிக.

361. நூ: கேண்மியா எனுஞ்சொல் உண்மையில் கேளுயாம்.

    நுதலுரை: மேலதற்கு ஒரு துணைவிதி கூறுகிறது.