பக்கம் எண் :
 
பொருளதிகாரம்232முத்துவீரியம்

4. தலைமகளுக்குரிய குணம்

832. 1 அச்சமு நாணு மடனுமுந் துறுத்த
       நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப.

என்பது, அன்புகாரணத்திற் றோன்றிய அச்சமும், காமக் குறிப்பு நிகழ்ந்தவழிப்
படுவதோருள்ள வொடுக்கமும், செவிலியர் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையும்
இம்மூன்று முதலியன நிச்சமும் பெண்பாற் குரியன.

(வி-ரை.) நிச்சமும் - நாளும்: எஞ்ஞான்றும். (4)

5. களவொழுக்கம் நிகழுமாறு

833. 2 வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலிதல்
        ஆக்கஞ் செப்ப னாணுவரை யிறத்தல்
        நோக்குவ வெல்லா மவையே போறன்
        மறத்தன் மயக்கஞ் சாக்கா டென்றச்
        சிறப்புடை மரபினவை களவாமென மொழிப.

என்பது, புணராத முன்னும் புணர்ந்த பின்னும் இருவருக்கும் நிகழ்ந்து ஒரு
தன்மைத்தாகிய நிலைபெறும் வேட்கையும், ஒருவரொருவரை இடைவிடாது சிந்தியாநிற்றலும்,
அங்ஙனம் உள்ளுதல் காரணத்தான் உடம்புவாடுதலும், யாதானு மோரிடையீறு கேட்டவழி
அதனை ஆக்கமாக நெஞ்சிற்கூறிக் கோடலும், ஆற்றுந்துணையு நாணி அல்லாத வழி
அதன்வரை யிறத்தலும், பிறர்தம்மை நோக்கிய நோக்கெல்லாந் தம்மனத்துக்
கரந்தொழுகுகின்றவற்றை யறிந்து நோக்குகின்றாரெனத் திரியக் கோடலும், விளையாட்டு
முதலியவற்றான் மறத்தலும், செய்திறனறியாது கையற்றுப் புள்ளும் மாவும் முதலியவற்றொடு
கூறலும், மடலேறுதலும் வரைபாய்தலும் போல்வன கூறலும் என்று கூறப்பட்ட அந்தச்
சிறப்புடைத்தான முறைமையினை யுடைய ஒன்பதும் களவொழுக்கமாம்.

என்னை?

இயற்கைப் புணர்ச்சி யிடந்தலைப் பாடு
பாங்கற் கூட்டம் பாங்கியிற் கூட்டமென்
றுணர்த்திய களவிற் புணர்ச்சிநால் வகைத்தே. -நம்பி. 27.

என்றாராகலின்.

1. தொல் - பொருள். - களவி - 8.

2. ,, ,, ,, 9.