பக்கம் எண் :
 
பொருளதிகாரம்338முத்துவீரியம்

(வ-று.)

மீண்டா ரெனவுவந் தேன்கண்டு நும்மையிம் மேதகவே
பூண்டா ரிருவர்முன் போயின ரேபுலி யூரெனைநின்
றாண்டான் அருவரை யாளியன் னானைக்கண் டேனயலே
தூண்டா விளக்கனை யாயென்னை யோவன்னை சொல்லியதே. (திருக். 244)

வியந்துரைத்தல்

என்பது, புணர்ந்துடன் வருவோரை வினாவி அதுவழியாகப் போகா நின்றவள், தன்
மகள் நின்ற நிலையையும் அவன் கைவேலினால் வேங்கை பட்டுக் கிடந்த கிடையையுங்
கண்டு, வியந்து கூறாநிற்றல்.

(வ-று.)

பூங்கயி லாயப் பொருப்பன் றிருப்புலி யூரதென்னத்
தீங்கையி லாச்சிறி யாணின்ற திவ்விடம் சென்றெதிர்ந்த
வேங்கையின் வாயின் வியன்னகம் மடுத்துக் கிடந்தலற
ஆங்கயி லாற்பணி கொண்டது திண்டிறல் ஆண்டகையே. (திருக். 245)

இயைபெடுத் துரைத்தல்

என்பது, வேங்கை பட்டது கண்டு வியந்து அது வழியாகப் போகின்றவள். எதிர்
வருவோரை வினாவ, அவர் நீ கூறுகின்றவரைக் குன்றத்திடைக் கண்டோம், அவ்விருவருந்
தம்முளியைந்து செல்லா நின்றமை கண்டு, எல்லாவற்றையு முடையளாகிய தன்
காதலியோ டொருவடிவாய் விளையாடும் புலியூரனென்றே கருதி, யாங்களெல்லா மொத்து
மிகவு மவ்வெழிலைத் தொழ நினைந்தோம், அந்நன்மை சொல்லலாவதொன்றன்றென,
எதிர்வருவோ ரவரியை பெடுத்துக் கூறல்.

(வ-று.)

மின்றொத் திடுகழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டுமின்ன
ஒன்றொத் திடவுடை யாளொடொன் றாம்புலி யூரனென்றே
நன்றொத் தெழிலைத் தொழவுற் றனமென்ன தோர்நன்மைதான்
குன்றத் திடைக்கண் டனமன்னை நீசொன்ன கொள்கையரே. (திருக். 246)