பக்கம் எண் :
 
பொருளதிகாரம்339முத்துவீரியம்

மீளவுரைத்தல்

என்பது, இயைபெடுத் துரைத்தவர், அவ்விருவருமோ ரிடுக்கணின்றிப் போய்த்
தில்லையினெல்லையைச் சென்றணைவர், இனி நீ செல்வதன்று, மீள்வதே காரியமெனத்,
தேடச்செல்லா நின்ற செவிலியை மீளக் கூறல்.

(வ-று.)

மீள்வது செல்வதன் றன்னையிவ் வெங்கடத் தக்கடமாக்
கீள்வது செய்த கிழவோ னொடுங்கிளர் கெண்டையன்ன
நீள்வது செய்தகண் ணாளிந் நெடுஞ்சுரம் நீந்தியெம்மை
ஆள்வது செய்தவன் றில்லையின் எல்லை அணுகுவரே. (திருக். 247)

உலகியல் புரைத்தல்

என்பது, மீளக் கூறவு மீளாது கவலாநின்ற செவிலிக்குச் சந்தனமும், முத்தும்,
சங்கும் தாம் பிறந்த விடங்கட்கு யாதும் பயன்படாது தம்மை விரும்பி யணிவாரிடத்தே
சென்று பயன்படும், அதுபோல, மகளிருந் தாம் பிறந்த விடத்துப் பயன்படார், நீ
கவலவேண்டாவென உலகியல்பு கூறல்.

(வ-று.)

சுரும்பிவர் சந்தும் தொடுகடன் முத்தும்வெண் சங்குமெங்கும்
விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி யாம்வியன் கங்கையென்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம் பலமனைய
கரும்பன மென்மொழி யாருமந் நீர்மையர் காணுநர்க்கே. (திருக். 248)

அழுங்குதாய்க்குரைத்தல்

என்பது, உலகியல்பு கூறவு மீளாது நின்று, தானெடுத்து வளர்த்தமை சொல்லிக்
கவலாநின்ற செவிலியை, முன்னிலைப் புறமொழியாக, இவர் தாமில்லின்க ணெடுத்து
வளர்த்தவர் போலும், அவர் போய்த் தம்மை யிருவரையுங் கூட்டுவித்த
தெய்வப்பதியாகிய தில்லையிடத்துப் பழனங்களைச் சென்றணைவரெனத், தம்முட்
கூறுவார் போன்று கூறி மீட்டுக்கொண்டு போகல்.