ஒவ்வொரு அடியிலும் முதல் எழுத்து ஒத்து வரும்படி பாடுவது மோனை. ஒவ்வொரு அடியிலும் இறுதியில் நின்ற சொல்லும் எழுத்தும் ஒத்து வரும்படி பாடுவது இயைபு. ஒவ்வொரு அடியிலும் முதலில் இரண்டாம் எழுத்து ஒத்து வரும்படியாகப் பாடுவது எதுகை. அடிதோறும் மொழிமுதலில் பொருளானும் சொல்லானும் மாறுபட்டு (முரண்பட்டு) வரும்படி பாடுவது முரண். ஒவ்வொரு அடியிலும் மொழி முதலில் உயிரெழுத்தாவது மெய்யெழுத்தாவது அளபெடை பெற்றுத் தம்முள் ஒத்து வரும்படி பாடுவது அளபெடை. ஒரு அடி முழுவதும் ஒரு சொல்லே வரும்படி பாடுவது இரட்டைத் தொடை. பாட விளக்கம் : ‘அகவலொன்றாம்’ (2வதுவரி) என்பது அகவல் மூன்றாம் என்று இருக்கவேண்டும் என்பது யாப்பருங்கலக்காரிகையால் (‘மூன்று அகவற்கு’ யா. கா. 14. 1) உணரலாம். 155. | முழுதுஅடிசீர் அகைஎழுத்தின் அந்தம்ஆ தியதாய் மொழிதல்அந்தா தித்தொடையாம், இவைமுழுதும் இலவேற் பழுதறுசெந் தொடைஇருசீர் இணைதல்இணை, முச்சீர் பற்றுவது கூழைநாற் சீர்முற்று முன்பின் எழும்ஒரூஉப், பொழிப்புஒன்று மூன்றுஉறின்,முன் னயல்சீர் இலதுமேற் கதுவாய்கீழ்க் கதுவாய்பின் னயற்சீர் அழிவுறலா(ம்), நெடிலின்மூன் றெழுத்து(உ)யிர்விட் டிசைஈ ரடிவருக்கம் அனுவொடுஐம் பான்ஒருதொடைஎன் றருளே. [4] | தொடையின் விரி உணர்த்துகின்றது. உரை : ஒரு அடியின் இறுதியில் (அந்தம்) நிற்கின்ற அடியோ, சீரோ, அசையோ, எழுத்தோ அடுத்த அடிக்கு முதலாக (ஆதி) வரும்படிச் செய்வது அந்தாதித் தொடை. மேலே கூறப்பட்ட மோனை முதலான பல்வேறு தொடையும் இல்லாமல் பாடுவது செந்தொடை என்று அழைக்கப்படும். |