எ-ன்:
இரண்டாம் வைப்பாகிய உயிர்மெய் எழுத்தும், அவற்றுள்,
குற்றெழுத்தும் நெட்டெழுத்தும், வருக்கத் தொற்றுக்கள் ஆமாறும்,
ஒற்றளபெடைகள் உயிரளபெடைகள் ஆமாறும் உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்:
பதினெட்டு ஒற்றுக்களின்மேலும் பன்னிரண்டு உயிர்களும் ஏற
அவை இருநூற்றொருபத்தாறும் உயிர்மெய் எனப்படும். என்னை?
உயிரீ ராறே மெய்ம்மூ வாறே
அம்மூ வாறு முயிரோ டுயிர்ப்ப
இருநூற் றொருபத் தாறுயிர் மெய்யே
என்றாராகலின்.
இனிக் கவ்வுக்கு ஙவ்வும், சவ்வுக்கு ஞவ்வும், டவ்வுக்கு ணவ்வும்,
தவ்வுக்கு நவ்வும், பவ்வுக்கு மவ்வும், றவ்வுக்கு னவ்வும் இவை வருக்கத்
தொற்றாம்.
ஒற்றுக்கள் ஊன்றிச் சொல்ல அளபெழும்; அவை ஒற்றளபெடையாம்.
நெட்டெழுத்தை நீட்டிச் சொல்ல அளபெழும்; அவை உயிரளபெடையாம்.
அ இ உ எ ஒ என்பன குற்றுயிர்; க கி கு கெ கொ என்பன
உயிர்மெய்க்குற்றெழுத்து. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்பன நெட்டுயிர்; கா கீ
கூ கே கை கோ கௌ என்பன உயிர்மெய் நெட்டெழுத்து.
ங ஞ ண ந ம ன வ ய ல ள ஃ என்னும் பதினொரு புள்ளியும்
குறிற்கீழும் குறிலிணைக்கீழும் அளபெழும் எ-று.
என்னை?
வன்மையொடு ரஃகான் ழஃகா னொழித்தாங்
கல்மெய் யாய்தமொ டளபெழு மொரோவழி.
என்பவாகலின்.
வரலாறு:
மங்ங்கலம், மஞ்ஞ்சு, மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு,
மின்ன்னு, தெவ்வ்வர், மெய்ய்யர், வெல்ல்க, கொள்ள்க, எஃஃகு இவை
குறிற்கீழ் அளபெழுந்தன.
|