|
‘திருநுதல் வேரரும்பும்’1
என்பது கைக்கிளைச் சம மருட்பா.
‘நிழன்மணி நின்றிமைக்கும்’2
என்பது, கைக்கிளை வியன் மருட்பா
பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.
‘வெண்பா, ஆசிரியம், கலியே, வஞ்சி’ என இவற்றை இடுகுறியானும் காரணக் குறியானும் வழங்குப.
காரணக்குறியான் வழங்குமாறு:
[வெண்பா]
வேற்று வண்ணம் விரவாது தூய்மை பெற்ற வெள்ளை வண்ணம் எல்லா வண்ணத்துள்ளும் சிறப்புடைத்து. அவ்வாறே, வேற்றுத் தளையும் அடியும் விரவாது தூய்மை பெற்று எல்லாப் பாவினுள்ளும் சிறப்புடைத்து ஆகலின், ‘வெள்ளை’ என்பது காரணக்குறி; திருவே போலச் சிறப்புடையாளைத் ‘திரு’ என்றாற்போலக் கொள்க.
[ஆசிரியப்பா]
சீரினாலும் பொருளினாலும் ஓசையினானும் ஆகிய நுண்மையைத் தன் கண் நிறுவிற்றாகலானும், புறநிலை வாழ்த்து முதலாகிய பொருள்களை ஆசிரியனே போல நின்று அறிவிக்கும் ஆகலானும், ‘ஆசிரியம்’ என்பதும் காரணக்குறி. ‘ஆசு’ எனினும், ‘சிறிது’ எனினும், ‘நுண்ணிது’ எனினும் ஒக்கும்.
[கலிப்பா]
சீர், பொருள், இசைகளால் எழுச்சியும், பொலிவும், கடுப்பும் உடைமைத் தாகலின் ‘கலி’ என்பதும் காரணக் குறி.
‘கலித்தல் கன்றல் கஞறல் பம்மல்
எழுச்சியும் பொலிவும் எய்தும் என்ப’
எனவும்,
‘கம்பலை சும்மை அழுங்கல் கலிமுழக்
கென்றிவை எல்லாம் அரவப் பெயரே’
எனவும், சொன்னாராகலின்.
1. யா. வி. பக். 169, 2. யா. வி. பக். 169.
|