பக்கம் எண் :
 

 490                                   யாப்பருங்கல விருத்தி

    என்னை?

[குறள் வெண்பா]

     ‘ஓரெழுத்தும் ஈரெழுத்தும் மூவெழுதது மாவழங்கா
     ஆசிரியத் துள்ளசைச்சீர் ஆம்’.

 என்பவாகலின்.

    அவற்றுள், நேர் அசையும் நேர்பு அசையும் ஓரெழுத்தாய வழி, நான்கெழுத்தடி முதலாகப் பதினைந்தெழுத்தடிகாறும் உயர்ந்த ஒரோ ஒன்றிற்குப் பன்னிரண்டு அடியாக, இரண்டிற்குமாய் இருபத்து நான்காம்.

     என்னை?

[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]

     ‘நேரசையும் நேர்பசையும் ஓரெழுத் தாயவழி
     நான்கெழுத் தாதி பதினைந்து காறுயரத்
     தோன்றுமால் நாலா றடி’.

 என்பவாகலின்.

    அவ்விரண்டையும் ‘தேமா’ என்னும் சீரேயாகுதலால், இரண்டுமாய் அலகு  நிலையாற் பன்னிரண்டேயாகக் கொள்ளப்படும்.

    என்னை?

[குறள் வெண்பா]

     ‘இருபன் னிரண்டென்பர் ஏனையார்; ஈண்டை
     ஒருபன் னிரண்டே துணிவு’.

    என்பவாகலின் இனி, நேர்பு அசை இரண்டெழுத்தாகக் கொள்ளுமிடத்து ஐந்தெழுத் தடி முதலாகப் பதினாறெழுத்தடிகாறும் உயரப் பன்னிரண்டு அடியாம்.

    என்னை?

[குறள் வெண்பா]

     ‘நேர்பீ ரெழுத்தாங்கால் ஐந்தாதி ஈரெட்டுச்
     சேர அடிபன் னிரண்டு’.

 என்பவாகலின்.