பக்கம் எண் :
 
சொல்லணியியல்233

இ - ள் : அக்கவர்படு பொருண்மொழி, வழுவில்லாத இடத்துப் பொதுப்பட வுரைப்பினும் குற்றமன்று எ - று.

என்னை? எனின்,

'வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல்

நினையுங் காலைக் கிளந்தாங் கியலும்'

(தொல் - சொல் - 54)

என்பது சூத்திரம். அதாவது, சொல் வேறுபடாத பலபொருள் ஒருசொல், ஆராயுமிடத்துக், குறித்துச் சொன்ன பொருளின்படி நடக்கும் என்பவாகலின்.

எ - டு :

'வானவர்கள் தாழ்ந்து பணிகேட்ப மாறாய

தானவர்கள் சுற்றந் தடிந்தொழித்த - மேன்மை

அரியே அனைத்துலகும் காக்கும் கடவுள்

எரியே மறையோர்க்(கு) இறை'

இ - ள் : தேவர்கள் பணிந்து ஏவல் கேட்ப, பகையான அசுரருடைய குலத்தைச் சேதித்துக் களைந்த, மேன்மை பொருந்திய அரியே அனைத்துலகும் காக்கும் கடவுள்; அக்கினியே வேதியர்க்கு இறை எ - று.

இதனுள், காத்தல் தொழில் திருமாலுக்கு முக்கியம். இனி, இந்திரன் எனினும் ஆம். 'அரி' என்பது இந்திரனுக்கும், திருமாலுக்கும் பொதுப் பெயர் ஆதலின், காவல் தொழில் யாவர் மேல் நிற்பினும் குற்றமன்று என்க.

(17)

(5) நிரனிறைவழு

108. ஒருநிரல் முன்வைத்(து) அதன்பின் வைக்கும்
நிரனிறை பிறழ்வது நிரனிறை வழுவே.

எ - ன், நிறுத்த முறையானே நிரனிறை வழுவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : ஒருநிரல் முன் எண்ணி வைத்து, அதன் பின் வைக்கும் நிரலை மொழிமாற்றிக் கொள்ளும்படி பிறழவைப்பது நிரனிறை வழுவாம் எ - று.

எ - டு :

'தெற்குக் குடக்கு வடக்குக் குணக்குமேல்

நிற்குந் திறத்துலகை நீடளிக்கும் - பொற்பினார்

ஈரெண் கலையோன் வருணன் இரவியமன்

யாரும் புகழியல்பி னார்'

இ - ள் : தெற்கு, மேற்கு, வடக்கு ,கிழக்கு என்னும் திசைகளின்மேல் நிற்கும் திறமையினாலே உலகை நெடுங்காலம் காக்கும் பொற்பினை யுடையார், பதினாறு கலைகளை யுடைய சந்திரன், வருணன், சூரியன், இயமன் என எவரும் புகழக்கூடிய இயல்பினை யுடையார் எ - று.

இதனுள், தென்திசை முதல் குணதிசை யீறாக அடைவே எண்ணி, அத்திசைகளினின்றும் உலகங்காப்பவர் - இயமன், வருணன், சந்திரன், சூரியன், என முறையே வையாது, சந்திரன், வருணன், சூரியன், இமயன் என முறைபிறழ வைத்தமையின் வழுவாயிற்று.