பக்கம் எண் :
 
சொல்லணியியல்223

புள்ளிபெற என்றது பண்டைய எழுத்துக்களின் நிலைமையை நோக்கியாம். எ, ஒ என்பன பண்டைக் காலத்து ஏகார ஓகாரங்களாகும். அவற்றின் மீது புள்ளி வைத்தால்தான் அவை குற்றெழுத்துக்களாகக் கொள்ளப்படும்.

(16) மாத்திரை வருத்தனம் என்பது, இதனை மறுதலைப்படப்பாடுவது. (ஒருபொருள் பயந்து நிற்பதொரு சொல், ஒரு மாத்திரையைப் பெருக்கப் பிறிதொருபொருள் பயக்குஞ் சொல்லாய் நிற்பது.)

எ - டு :

'அளபொன் றேறிய வண்டதிர் ஆர்ப்பினால்

அளபொன் றேறிய மண்ணதிர்ந் துக்குமால்

அளபொன் றேறிய பாடல் அருஞ்சுனை

அளபொன் றே(று)அழ(கு) ஊடலைந் தாடுமால்'

வண்டு - அளி; அளபேறிய வண்டு - ஆளி எனவும்; மண் - தரை; அளபேறியமண் - தாரை எனவும்; பாடல் - கவி; அளபேறிய பாடல் - காவி எனவும்; அழகு - வனப்பு; அளபேறிய அழகு - வனப்பு எனவும் காண்க.

(வி - ரை) மாத்திரை வருத்தனம் - மாத்திரையைப் பெருக்கல்; மாத்திரையைக் கூட்டிச் சொல்லல். இது நற்றாய் இரங்கல் என்னும் துறையாம்.

இ - ள் : தலைவி தலைவனுடன் காட்டில் உடன்போகும் பொழுது, ஆளியின் ஆர்ப்பினால் தலைவியினுடைய காவி அனைய கண்கள், மழை போன்ற கண்ணீரில் மூழ்கியாடும், கண்ணீர் தாரை தாரையாக மார்பில் உகும் என்பதாம்.

(17) முரசபந்தம் என்பது, ஓரடி ஒருவரியாக நான்குவரியெழுதி, மேலிரண்டு வரியும் தம்முள் கோமூத்திரியாகவும், கீழிரண்டு வரியும் தம்முள் கோமூத்திரியாகவும், சிறுவார் போக்கி, மேல்வரி தொடங்கி இரண்டாம் வரியினும், மூன்றாம் வரியினும், நான்காம் வரியினும் கீழுற்று மீண்டு மேல் நோக்கவும், கீழ்வரி தொடங்கி அவ்வாறே மேலுற்று மீண்டு கீழ்நோக்கவும் பெருவார் போக்கி, இந்த வார் நான்கும் நான்கு வரியாகவும் பாடுவது.

படம்

எ - டு :

'கான வாரண மரிய வாயினனே
தான வாரண மரிய வாயினனே

மான வாரண மரிய வாயினனே

கான வாரண மரிய வாயினனே'