பக்கம் எண் :
 
234தண்டியலங்காரம்

(வி - ரை)இயமன், வருணன், குபேரன், இந்திரன் ஆகிய நால்வரையும் முறையே தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளுக்குக் காவலர்களாகக் கூறலே மரபு. எனினும் வடதிசைக்கு ஈரெண் கலையானாகிய சந்திரனைக் காவலாகக் கூறியதன் கருத்து விளங்கவில்லை. குபேரன் திசையாகிய வடதிசையினைத் திவாகர நிகண்டு 'சந்திர திசை' எனக் கூறுதல் பற்றி, 'ஈரெண் கலையோன் திசை' எனக் கூறினர் போலும்! அங்ஙனம் கொள்ளின் ஈரெண் கலையோன் என்பது குபேரனைக் குறிக்கும்; 'ஈரெண்கலை' என்னும் அடைமொழி சந்திரனுக்கு அடையாய்க் குபேரனைப் பெயரளவில் குறித்ததாகக் கொள்ளல் வேண்டும். கீழ்த் திசைக்கு இந்திரனைக் காவலராகக் கூறாது சூரியனைக் கூறியது, அத்திசைக்குச் 'சூரிய திசை' என்ற பெயர் பற்றிப் போலும்.

(18)

மேலதற்கோர் சிறப்புவிதி

109.உய்த்துணர வரும்வழி யவ்வாறும் உரித்தே.

- ன்,மேலதற்கு ஓர் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் :அந்நிரனிறை உய்த்துக்கொண்டு உணர்வதாகத் தோன்றுவதாயிற் பிறழினும் பிறழ்வன்று எ - று.

எ - டு :

'குடபால் வடபால் குணபால்தென் பால்என்(று)
அடைவே திசைநான்(கு) அவற்றுள் - இடையிரண்டு
நன்மைபுரி வோர்நயந்து நோக்குப ஏனைய
வன்மை புரிவோர்க்கே யாம்'

இ - ள் : மேற்குத்திசை, வடக்குத்திசை, கீழ்த்திசை, தென்திசை என்று முறையே ஏற்பட்ட திக்குகள் நான்கனுள், இடையிலுள்ள இரண்டும் நன்மை புரிவோர் விரும்பி நோக்குவனவாம்; மற்றைய தீமை புரிவோர்க்கு உரியனவாம் எ - று.

நன்மைக்கு மறுதலை - அன்மை. இதனுள் உய்த்துணர்ந்து கொள்ளப் பிறழாதென வைத்தவாறாவது, மேல்திசை முதலாகத் தென்திசை யீறாக அடைவே எண்ணி, நடுக்கிடந்த வடதிசையும் குணதிசையும் நற்கருமஞ் செய்வோர் நோக்கற்பால வென்றும், மேற்கும் தெற்கும் தீக்கருமஞ் செய்வோர் நோக்கற்பால வென்றும் உய்த்துணர வைத்தவாறு காண்க.

(19)

(6) சொல்வழு

110. சொல்வழு வென்பது சொல்லிலக் கணத்தொடு

புல்லா தாகிய புகர்படு மொழியே. 

  எ - ன், நிறுத்த முறையானே சொல்வழுவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : சொல் வழுவாவது, சொல்லதிகாரத்தில் சொல்லிய இலக்கணத்தோடு மாறுபட்டு வருஞ்சொல் புணர்க்கப்படுவது எ - று.

எ - டு :

'யாவகைய தாயர்க்கும் எங்களுக்கும் எந்தையர்க்கும்
ஆவி யிவளே யனையவர்க்கும் - கோவே!
நுனக்க பயமிந்த நுண்மருங்குல் மாது
தனக்கிடரொன் றில்லாமல் தாங்கு'