பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 131
 

      கலம்புனை உதவியோ உடையேன் மன்னே
     அஃதறி கிற்பினோ நன்றுமற் றில்ல
     அறுவை தோயும் ஒருபெருங் குடுமிச்
     சிறுபை நாற்றிய பஃறலைக் கருங்கோல்
     ஆகுவ தறியும் முதுவாய் வேல
     கூறுக மாதோ கழங்கின் திட்பம்
     மாறா அரும்பனி கலுழும் கங்குல்
     ஆனாது துயரும்எம் கண்ணினிது படீஇயர்
     எம்மனை முந்துறத் தருமோ
     தம்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே.’        (அகம்-195)

       இங்ஙனம் புகுந்து பெயர்ந்த பின்றைத் தலைமகன் தன் அகத்தே
வதுவைக் கலியாணஞ் செய்வான் எடுத்துக் கொண்டான் என்பது கேட்ட
நற்றாய், ‘ஒழிந்த கலியாணஞ் செய்யினும் நம்மகத்தே வதுவைக் கலியாணஞ்
செய்வான் நேருங்கொல்லோ காளையைப் பயந்தாள்’ என்னும்; அதற்குச்
செய்யுள்:

       
நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதல்

  ‘தாளை வணங்கா தவர்படச் சங்கமங் கைத்தனது
  வாளை வலங்கொண்ட மாறனிவ் வையத் தவர்மகிழ
  நாளைநம் இல்லுள் வதுவை அயர்தர நல்குங்கொல்லோ
  காளையை ஈன்ற கடனறி நல்நெஞ்சிற் காரிகையே’          (205)

  ‘புல்லா வயமன்னர் பூலந்தை வான்புகப் பூட்டழித்த
  வில்லான் விசாரிதன் கூடல் விழவினைப் போல்நமில்லுள்
  நல்லார் மகிழ்வெய்த நாளை மணஞ்செய்ய நல்குங்கொல்லோ
  கல்லார் திரள்தோள் விடலையை ஈன்ற கனங்குழையே’      (206)

  ‘மையே றியபொழில் மாநீர்க் கடையன்மன் ஓடவென்றான்
  மெய்யே றியசீர் மதுரை விழவினைப் போல்நமில்லுள்
  நெய்யேர் குழலி வதுவை அயர்தர நேருங்கொல்லோ
  பொய்யே புரிந்தவக் காளையை ஈன்ற பொலங்குழையே’     (207)

    ‘நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
    எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச்
    சொல்லின் எவனோ மற்றே வென்வேல்
    மையற விளங்கிய கழலடிப்
    பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே’          (ஐங்குறு-399)

எனக் கொள்க.                                              (23)