பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - கற்பு 163
 

பகைதணிவினை என இரண்டினையும் ஒருங்குவைத்து அவ் விரண்டினையும்
அரசர்க்குரிய என்றமையின் அப்பொருட்டு என்பது. என்னை அரசர்க்கு
உரித்தாமாறு எனின், இருவரரசர் வேறுபட்டு மாறுகொண்டிருந்தவிடத்து
அவர்களைச் சந்து செய்வித்தற்குப் பிரியாதுவிடின், அவர்களைச் சார்ந்து
வாழ்வாரும் அவர்கள் நாடும் பெரிதும் துன்பம் எய்துமன்றே; அதனை
நீக்கும் பெருமையுடையான் அதனை நீக்காது உடன்பட்டிருப்பது பாவமும்
பழியுமாகலான், அரசர்க்கு உரித்து; அவ்வகை அவர்க்கு உரித்தாகிய சந்து
பார்ப்பார்க்கும் உரித்து; என்னை, அவரும் பெருமையுடையர் ஆகலான்.
அதற்குச் செய்யுள்:

 
‘தாக்கிய போர்வய வேந்த ரிருவர்க்குஞ் சந்திடைநின்
  றாக்கிய செல்வது காதலித் தார்நமர் ஆரமருள்
  வீக்கிய வார்கழல் வேந்தர்தம் மானம்வெண் மாத்துடனே
  நீக்கிய கோன்நெடு நீர்வையை நாடன்ன நேரிழையே’       (241)

என்பது.                                                    (4)

                         
சூத்திரம்-38

      அரசர் அல்லா ஏனை யோர்க்கும்
      புரைவ தென்ப ஓரிடத் தான.

என்பது என்னுதலிற்றோ எனின், சந்து செய்வித்தற்குப் பிரியும் பிரிவு
அரசர்க்கன்றியும் வாணிகர்க்கும் வேளாளர்க்கும் உரித்து என்பது
உணர்த்துதல் நுதலிற்று:

       இதன் பொருள்: அரசர் அல்லா ஏனையோர்க்கும் என்பது-
ரசரல்லாத ஏனையோராவார் ஒழிந்த வாணிகரும் வேளாளரும் என்ற
இருவர்க்கும் என்றவாறு; புரைவது என்ப ஓரிடத்தான என்பது-பொருந்தும்
என்ப அவர் இல்வழி என்றவாறு.

      அரசரில்லாதவழி வாணிகரும், வேளாளரும், வேறுபட்டு
மாறுகொண்ட இருவரையும் சந்து செய்வித்தற்குப் பிரியப் பெறுவார் என்பது.
பொருளானும் ஆள்வினையானும் அரசரோடொப்பர், வாணிகரும்
வேளாளரும் என்னும் வேற்றுமையல்லது என்பது. அஃதே யெனின்,
மேற்சூத்திரம் வேண்டா, ‘அரசரல்லா ஏனையோர்க்கும்’ எனவே,
பார்ப்பாரும் அடங்குவர் ஆகலான் என்பது; என்றார்க்கு, அதுவன்று;
அரசரல்லா ஏனையோர் என்பது அரசரிற் பின்சொல்லப்படும்
வாணிகரையும்