| 
     
                             
     
     சூத்திரம்-41
 பிரிவின் நீட்டம் நிலம்பெயர்ந் துறைவோர்க்கு
 உரிய தன்றே யாண்டுவரை யறுத்தல்.
 
 என்பது என்னுதலிற்றோ எனின், தலைமகன் பிரிந்துறையும் இடத்துக்
 காலவரையறை உணர்த்துதல் 
     நுதலிற்று.
 
 இதன் பொருள்: பிரிவின் நீட்டம் என்பது - பிரிவினது
 நெடுங்காலைச் செலவு என்றவாறு; நிலம் 
     பெயர்ந்து உறைவோர்க்கு என்பது
 - இடத்தின் நீங்கி நாடிடையிட்டும் காடிடையிட்டும் 
     உறைவோர்க்கு
 என்றவாறு; உரியது அன்றே யாண்டு வரையறுத்தல் என்பது - உரித்தன்று
 யாண்டு 
     வரையறுத்துப் பிரிதல் என்றவாறு.
 
 என்பதனாற் போந்த பொருள் யாதோ எனின், நாளும் திங்களும்
 இருதுவும் வரையறுத்துப் பிரிப 
     என்பது; இன்னநாளுள் வருதும், இன்ன
 திங்களுள் வருதும் இன்ன இருதுள் வருதும் என்று சொல்லிப் 
     பிரியும்
 என்பது.
 
 நாட்குறித்துப் பிரியலுறுந் தலைமகன் பிரிவுணர்த்தப்பட்ட தோழி
 சென்று தலைமகட்குச் 
     சொல்லியதற்குச் செய்யுள்:
 
 நாட்குறித்தது தோழியுரைத்தல்
 
 ‘கேளே பெருக்கும் அரும்பொருள் செய்தற்குக் கேடில்திங்கள்
 நாளே குறித்துப் பிரியலுற் றார்நமர் தீவிழியால்
 ஆளே கனலுங்கொல் யானைச்செங் கோலரி கேசரிதன்
 வாளே புரையுந் தடங்கண்ணி என்னோ வலிக்கின்றதே.’     (279)
 
 திங்கள் குறித்துத் தலைமகன் பிரிய வேறுபட்டாள் தலைமகள்;
 வேறுபட, ஆற்றாள் எனக் கவன்ற 
     தோழிக்கு, ஆற்றுவல் என்பதுபடத்
 தலைமகள் சொல்லியதற்குச் செய்யுள்:
 
 ‘வார்ந்தார் கருமென் குழல்மங்கை மாநிதிக் கென்றகன்ற
 ஈர்ந்தா ரவரின்று காண்பர்கொல் லோஇக லேகருதிச்
 சேர்ந்தார்ப் புறங்கண்டு செந்நிலத் தன்றுதிண் தேர்மறுத்துப்
 பேர்ந்தான்1 தனது குலமுத லாய பிறைக்கொழுந்தே’.        (280)
 
 என்பது என் சொல்லினாளோ எனின், ‘யான் ஆற்றேனாயன்று
 வேறுபடுகின்றது. அவர் குறித்த திங்களது 
     வரவு கண்டு தாம்
 எடுத்துக்கொண்ட பொருள் முடியாது பெயர்வர்கொல்லோ என
 ஆற்றேனாவது’ என்றாள் 
     என்பது.
 
 (பாடம்) 1. விசாரிதன் றன்முதலாய.
 |