*‘கருந்தண் புயல்வண்கைத் தென்னவன் கைம்முத் தணிந்திலங்கும்
இருந்தண் குடைநெடு மாறன் இகல்முனை போல்நினைந்து
வருந்தல் மடந்தை வருவர்நம் காதலர் வான் அதிரக்
குருந்தம் பொருந்திவெண் முல்லைகள் ஈன்றன கூரெயிறே.’ (307)
இதுவும் அது.
*‘புலமுற்றுந் தண்புயல் நோக்கிப்பொன் போலப் பசந்ததின்பால்
நலமுற்றும் வந்த நலமுங்கண் டாய்நறை யாற்றெதிர்ந்தார்
குலமுற்றும் வாடவை வேல்கொண்ட மாறன் குரைகடல்சூழ்
நிலமுற்றுஞ் செங்கோ லவன்தமிழ் நாடன்ன நேரிழையே.’ (308)
இதுவும் அது.
‘அறையார் கழன்மன்னன் ஆற்றுக் குடியழல் ஏறவென்று
கறையார் சுடர்வேல் வலங்கொண்ட கோன்கடல் ஞாலமன்னாய்
நிறையாம் வகைவைத்து நீத்தவர் தேரொடு நீபிணித்த
இறையார் வரிவளை சோரவந் தார்த்தன ஏர்முகிலே.’ (309)
இதுவும் அது.
அஃதே யெனின், ‘எல்லா வாயிலுங் கிழவோன் பிரிவயின் வன்புறை
குறித்த’ என்னாது,
‘பல்லாற்றானும்’ என மிகைபடக் கூறியவதனான்
கற்புக்காலத்துக் கடிமனை சென்ற செவிலி,
தலைமகனது நிலைமையும்
தலைமகளது நிலைமையும் பார்த்து வந்து நற்றாய்க்குச் சொல்லியனவும்
கொள்க; அதற்குச் செய்யுள்:
செவிலி நற்றாய்க்குரைத்தல்
‘திருநெடுங் கோதையும் தெய்வம் தொழாள்தெவ்வர் மேற்செலினும்
பெருநெடுந் தோளண்ணல் பேர்ந்தன்றித் தங்கான்
பிறழ்வில்செங்கோல்
அருநெடுந் தானை அரிகே சரிஅந்தண் கூடலன்ன
கருநெடுங் கண்மட வாயன்ன தாலவர் காதன்மையே.’ (310)
‘பார்மன்னன் செங்கோற் பராங்குசன் கொல்லிப் பனிவரைவாய்க்
கார்மன்னு கோதையன் னாளும் அருந்ததிக் கற்புடையாள்
தேர்மன்னன் ஏவச்சென் றாலும் முனைமிசைச் சேர்ந்தறியா
போர்மன்னு வேலண்ணல் பொன்னெடுந் தேர்பூண்புரவிகளே.’ (311)
*‘கூரார் அயில்கொண்டு நேரார் வளம்பல கொண்டவென்றித்
தேரான் வரோதயன் வஞ்சியன்னாள் தெய்வஞ் சேர்ந்தறியாள்
வாரார் கழல்மன்னன் தானே பணிப்பினும் வல்லத்துத்தன்
நேரார் முனையென்றும் தங்கி அறியான் நெடுந்தகையே.’ (312)
பிறவுங் கொள்க.
*இக் குறிபெற்ற பாட்டுக்கள் மிகையாகக் காணப்படுவன.
|