பக்கம் எண் :
 
208இறையனார் அகப்பொருள்

சூத்திரம்-60


     களவு கற்பெனக் கண்ணிய ஈண்டையோர்
     உளநிகழ் அன்பின் உயர்ச்சி மேன.

என்பது என்னுதலிற்றோ, எனின் மேல்வகுத்த களவு கற்புகட்குப் பிறிதும்
ஆவதோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

     இதன் பொருள்: களவு கற்பு எனக் கண்ணியது என்பது - களவென்றும்
கற்பென்றும் புலவோரால் வகுத்துரைக்கப்பட்ட ஒழுக்கங்கள் என்றவாறு;
ஈண்டையோர் என்பது - இவ்வுலகத்திற் பிறந்தானும் சஞ்சரித்தானும்
பொருந்துவோரது என்றவாறு; உளம் நிகழ் அன்பின் உயர்ச்சி மேன என்பது
- உயர்குலத் தலைவன் தலைவியென்று இன்னோரது உளத்தின்கண்

நிகழ்கின்ற அன்பினது உயர்வின்கண்ணவாம் என்றவாறு.
 

    தேவர்க்கும் நாகர்க்கும் இவ்வொழுக்கம் அவர் உலகத்தில் இல்லை
என்பார், ‘ஈண்டையோர்’ என்றார். எனவே, அன்னோர்க்கு அஃது ஓரோர்
காலத்து இவ்வுலகத்து நிகழும் என்றாராயிற்று; அஃது இவ்வுலகிலும்
இயற்கையான் நிலைபெறாது புலவரான், ‘இல்லது இனியது நல்லது’ என
நாட்டப்பட்டதோர் ஒழுக்கம் என்பார், ‘கண்ணிய’ என்றார்.

     இனி, இரட்டுறமொழிதலான், ‘ஈண்டையோர்’ என்பதை ஒருபெயராகக்
கொள்ளாது; ‘ஈண்டை ஓர்’ எனக்கொண்டு,

    ‘தானே யவளே தமியர்’                     (இறையனார்-2)
 

என்றதனால், தானே அவள், அவளே தான் என இயன்ற ஈருடலின் ஓருயிர்

போல்வார் உளத்து என்று கொள்ளினும் அமையும். ‘அன்பின் உயர்ச்சி’
எனவே, அஃதில்லாவிடத்து இவ்வொழுக்கங்கள் நடைபெறா என்பதூஉம்,
அதனானே அஃது உயர்ந்தோர்மாட்டது என்பதூஉம், அவருள்ளும்
அரசர்க்கே சிறந்தது என்பதூஉம் பெற்றாம். அற்றாயின், ‘உயர்ந்தோர் மேன’
எனப் பாடமோதலாகாதோ எனின்,

     ‘அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
     கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர்’             (அகத்-23)

என மற்றை வருணத்தோர்க்குஞ் சிறுபான்மை அஃது உரியது என்று
தழீஇக்கோடல் கருதப்பட்டது என்க.                               (27)
 

கற்பியல் முற்றும்
களவியல் என்ற இறையனார் அகப்பொருள்
மூலமும் உரையும்
முற்றிற்று.