|
இனிச், சுனைக்குவளையும் சுனையாம்பலும் உண்மையானும்
அமையும். அது 1பெருங்குறிஞ்சியிற் கண்டுகொள்க.
இனித், தலைமகன் என்னுஞ் சொல்லொடு மாறுகொள்ளும், பிறனொரு
தலைமகன் நிலத்துப் புணர்ந்தான் என்றமையின் எனின், மாறுகொள்ளாது;
என்னை? நின்ற ஒருவனாய பாண்டியனது பொதியில் இடமாகச்
சொன்னமையான். என்னை? அக் குலத்துள் தோன்றுவார் தேவர்களே
யாகலான் நம்மால் வேண்டப்பட்ட தலைமகன் தேவருள் மிக்கான்
எனப்படான்; மக்களுண் மிக்கான் ஆயதல்லது. ஆகலின், இவன் நிலத்துப்
புணர்ந்தான் என்பது தலைமையொடு மாறுகொள்ளாது என்பது. அல்லதூஉம்,
‘மழைவளந்
தரூஉ மாவண் தித்தன்
பிண்டி நெல்லி னுறந்தை யாங்கட்
கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தங்
குழைமா ணொள்ளிழை நீவெய் யோளொடு
வேழ வெண்புணை தழீஇப் பூழியர்
கயநா டியானையின் முகனமர்ந் தாஅங்
கேந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய
நெருந லாடினை புனலே’
[அகம் - 6]
என்றும்,
‘பகுவாய் வராஅற் பல்வரி
யிரும்போத்து’
[அகம் -
36]
என்றும், கிளவித் தலைமகனைப் பாட்டுடைத் தலைமகன் நிலத்துப்
புனலாடினான் என்றும், புணர்ந்தான் என்றும் பிறசான்றோர் செய்யுளுள்ளுஞ்
சொல்லப்பட்ட தாகலினாலும் அமையும் என்பது. இப் பாட்டினால், தன்கண்
நின்ற அன்பு வெளிப்படுத்துத் தலைமகளைப் புகழ்ந்து, நயப்பு உணர்த்திற்
றாயிற்றுப் போந்த பொருள். இன்னுஞ் செய்யுள்:
‘தூவுண்டை வண்டினங் காள்வம்மின்
சொல்லுமின் துன்னிநில்லாக்
கோவுண்டை கோட்டாற் றழிவித்த கோன்கொங்க நாட்டசெங்கேழ்
மாவுண்டை வாட்டிய நோக்கிதன் வார்குழல் போற்கமழும்
பூவுண்டை தாமுள வோநுங்கள் கானற் பொழிலிடத்தே.’
(5)
‘இருங்கழல் வானவன் ஆற்றுக் குடியிகல்
சாய்ந்தழியப்
பொருங்கழல் வீக்கிய பூழியன் மாறன்தென் பூம்பொதியின்
மருங்குழ லுங்களி வண்டினங் காளுரை யீர்மடந்தை
கருங்குழல் நாறுமென் போதுடைத் தோநுங் கடிபொழிலே.’
(6)
(பாடம்) 1. குறிஞ்சிப்பாட்டு.
|