வேண்டாக் குறிப்பினளாவது எனக் கொள்க. இனிப், பிறர், குறிப்பு வேறு
கொளலும்’ என்பதனைச்
சொல்லுமாறு: ‘தன் குறிப்பினளன்றி நின்றாட்கு என்
சொல்லிச் செல்கேன்?’ என்னும்;
அதற்குச் செய்யுள்:
தலைவி தன் குறிப்பினளல்லள் என்றல்
‘ஆடியல் மாநெடுந் தேர்மன்னர் ஆற்றுக் குடியழியக்
கோடிய திண்சிலைக் கோனெடு மாறன்தென் கூடலன்னாள்
நீடிய வார்குழல் நீலமுஞ் சூடாள் நினைந்துநின்றாள்
தோடியல் பூந்தொங்க லாயறி யேன்சென்று சொல்லுவதே’ (115)
‘நெறிநீர் இருங்கழி நீலமும் சூடாள்
பொறிமாண் வரியலவன் ஆடலும் ஆடாள்
சிறுநுதல் வெயர்வரும்பச் சிந்தியா நின்றாட்கு
எறிநீர்த்தண் சேர்ப்பயான் என்சொல்லிச் செல்கோ’
என இவ்வாறு சொல்ல ஆற்றானாயினான், அச் சொல்லே பற்றுக்
கோடாக ஆற்றும் என்பது. என்னை
யெனின், ‘அவள் தன் குறிப்பினளன்றி
நின்றாள்’ எனச் சொல்லினமையின் குறிப்பினளாய்
நின்றபொழுது சொல்லும்
என ஆற்றுவானாம்.
அன்ன பிறவுந் தலைப்பெயல் வேட்கை முன்னுறு புணர்ச்சிக்கு
உரிய என்ப என்பது - அன்ன மற்றுமுள
முன்னுறு புணர்ச்சியைப்போலத்
தலைப்பெய்விம்பல் என்னும் உள்ளத்தாள் சொல்லுதற்கு உரிய
கிளவிகளெனக் கொள்க. அங்ஙனம் ஓதுவான் புகப் பெருகுவது கண்டு
சிலவோதிச் சில புறனடுத்தார்
அஃது இலக்கணமாகலான் என்பது.
‘அன்ன பிறவும்’ என்றதனான் இங்ஙனமுஞ் சொல்லும்; ‘நீயிர்
விருந்தினிராகலான் அவளது
அருமையும் பெருமையும் அறியீரன்றே, அவள்
தாமரைக்கொட்டையின் அல்லியே போலக் கிளை
புறங்காப்பச் செல்வாள்,
இந்நிலத்துக்கு மிக்காள் ஒரு தலைமகள், எமக்குக் கண்கூடாகச் செல்வதோர்
தெய்வ மல்லளோ? அவளைக் கண்ணிற் கண்டு கையிற் கூப்பித், தலையிற்
பணிந்து வழிபட்டுச்
செல்வதல்லது எம்போல்வார்களால் ஒரு
குறையுறவுணர்த்துந் தன்மையளோ’ என்று சொல்லும்;
அதற்குச் செய்யுள்:
சொல்லற்கு அருமை சாற்றல்
‘புட்புலம் பும்புனற் பூலந்தைப் போரிடைப் பூழியர்கோன்
உட்புலம் போடு செலச்செற்ற வேந்தன் உறந்தை யன்னாள்
கட்புல னாய்ச்செல்லுந் தெய்வங்கண் டாய்கமழ் பூஞ்சிலம்பா
வட்கில னாகியெவ்வாறு மொழிவனிம் மாற்றங்களே’ (116)
|