இது தெருட்டுந் தோழிக்குத் தலைவி காமத்து மிகுதிக்கட் கூறியது. |
இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும்-அங்ஙனம் அலமரல் பெருகிய வழித் தலைவனை எதிர்ப்பட்ட ஞான்று இன்பமுந் தனிப்பட்ட ஞான்று துன்பமும் உளவாகிய இடத்தும். |
உதாரணம் |
“வாரன் மென்றினைப் புலவுக்குரன் மாந்திச் சாரல் வரைய கிளையுடன் குழீஇ வளியெறிவயிரிற் கிளிவிளி பயிற்று நளியிருஞ் சிலம்பி னன்மலை நாடன் புணரிற்புணருமா ரெழிலே பிரியின் மணிமிடை பொன்னின் மாமைசாயவெ னணிநலஞ் சிதைக்குமார் பசலையதனா லசுணங் கொல்பவர் கைபோனன்று மின்பமுந்துன்பமு முடைத்தே தண்கமழ் நறுந்தார் விறலவன் மார்பே”1 |
(நற்றிணை-304) |
“இன்கணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கணுடைத்தாற்புணர்வு”2 |
(குறள்-1152) |
கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ நளியினீக்கிய இளிவருநிலையும்-யானைக்கன்று போலும் புதல்வன் பிறத்தலான் உளதாகிய விருப்பத்தையுடைய நெய்யணிக்கு விரும்பிய தலைவன் நெஞ்சை வருத்தித் தன்னைச் செறிதலினின்று நீக்கிய இளிவந்த நிலைமைக் கண்ணும். |
|
1. பொருள் : தோழீ! கிளிகள் இனத்துடன் மலைச்சாரலில் தினைக் கதிர்களை மாந்தி காற்றால் ஒலிக்கும் ஊது கொம்புகள் போல ஒன்றையொன்று அழைக்கும் நன்மலை நாடன் நம்மைப்புணரின் நம் அழகும் நம்மைச் சேரும். அவன் பிரியின் மணியிடை யழுத்திய பொன் போன்ற என் உடம்பில் உள்ள மாமை நிறம்கெட என் அழகையும் நலத்தையும் அழிக்கும் பசலை. அதனால் அவன் மார்பானது அசுணமாவைப் பிடிக்க முதலில் யாழ் வாசித்தும் பின் பறையை ஒலித்தும் முதலில் இன்பமும் பின் துன்பமும் செய்வோரது கைபோல நமக்கு இன்பமும் துன்பமும் செய்கின்றது. |
2. பொருள் : பக்கம் 81ல் காண்க. |