பக்கம் எண் :

102தொல்காப்பியம் - உரைவளம்
 

தாமரைத் தண்டாதூதி மீமிசைச்
சாந்திற்றொடுத்த தீந்தேன்போலப்
புரையமன்ற புரையோர் கேண்மை
நீரின்றமையாவுலகம் போலத்
தம்மின்றமையா நந்நயந்தருளி
நறுநுதல் பசத்தலஞ்சிச்
சிறுமையுறுபவோ செய்பறியலரே”
1
  

(நற்றிணை-1)
  

இதனுள், தாமரைத்  தாதையும்  ஊதிச்  சந்தனத்தாதையும்  ஊதி  வைத்த தேன்போலப் புரைய
என்றதனான்    ஏற்றற்   கண்    தலைவி    கூறினாள்;    பிரிவறியலரென்றதும்    அன்னதோர்
குணக்குறையிலரென்றதாம். பிரிவுணர்ந்து புலந்துரைப்பின் நாணழிவாம்.
  

“நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரளவின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேனிழைக்கு நாடனொடு நட்பே”
2
  

(குறுந்-3)
  

இது, நிறுத்தற்கட் கூறியது.
  

கிழவனை  மகடூஉப்  புலம்பு  பெரிதாகலின்  அலமரல்  பெருகிய  காமத்து மிகுதியும்-அறமும் 
பொருளுஞ் செய்வதனாற் புறத்துறைதலில்   தலைவனைத்  தலைவி  நீங்குங்காலம்  பெரிதாகலின்
அதற்குச் சுழற்சி மிக்க வேட்கை மிகுதி நிகழ்ந்தவிடத்தும்.
  

உதாரணம்
  

“காமந்தாங்குமதி யென்போர் தாமஃ
தறியலர் கொல்லோ வனைமதுகையர்கொல்
யாமெங் காதலர்க் காணேமாயிற்
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல வில்லாகுதுமே”
3
  

  (குறுந்-290) 


1.பொருள் :பக்கம் 77ல் காண்க.
  

2. பொருள் :பக்கம் 79ல் காண்க.
  

3. பொருள் :  யாம்  எம் காதலரைக் காணேமாயின் கல்லில் மோதப் பெறும் பெருவெள்ளத்துச்   
சிறுநுரை தேய்ந்தழிவதுபோல மெல்ல மெல்லக் கரைவேம்.