பக்கம் எண் :

கற்பியல் சூ.689
 

அவளடிமேல்  வீழ்ந்தவனை  நெருங்கி  நின்மாட்டுக்  காதலையுடைய எங்கையர் காணின் இப்பணிதல்
நன்றா
1மெனக் காதலமைந்த வகையின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.
  

“நில்லாங்கு நில்லா” என்னும் மருதக்கலியுள், (95)  

“நல்லாய், பொய்யெல்லாம் ஏற்றித் தவறுதலைப் பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தேன்: அருளினி
அருளுகம் யாம் யாரே மெல்லாதெருள
அளித்துநீ பண்ணிய பூழெல்லா மின்னும்
விளித்துநின் பாணனோடாடி யளித்தி
விடலைநீ நீத்தலின் நோய்பெரி தேய்க்கும்
நடலைப் பட்டெல்லா நின்பூழ்”
2

  

இதனுள்  “கையொடு கண்டை பிழைத்தேனருள்”  என  அடிமேல் வீழ்ந்தவாறும், ‘அருளுகம் யாம்
யாரேம்”  எனக்  காதலமைந்தவாறும்,   ‘நீ   நீக்கலின்நின்   பூழெல்லாம்  நடலைப்பட்டு  நோய்
பெரிதேய்க்கும்’ அவற்றையின்னும் விளித்து  நின்பாணனோடாடியளித்துவிடும்  எனவும் இப்பணிதல்
நின் பெண்டிர்க்கு  நன்றாகுமே  எனவுங்  கூறியவாறு  காண்க.  ஈண்டுப்பூழ்  என்றது குறிப்பினாற்
பரத்தையரை.
  

தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளியவழியும் என்பது-தாயரைக் கிட்டிய
நல்ல அணியையுடைய புதல்வனை மாயப்பரத்தை குறித்த வழியுங் கூற்று நிகழும் என்றவாறு.
  

புதல்வனைப்   பரத்தைமை    குறித்தலாவது  தலைவன்  புறப்பெண்டிர்  மாட்டுப்  போகியவழி
வெகுளுமாறுபோலப்
  


1. நன்றாம் என்பது நன்றன்றாம் என்னும் குறிப்பில் வந்தது. எள்ளல் சுவை.
  

2. பொருள் : நல்லாய்! யான் செய்த தவறுகளை என்மேல் ஏற்றி என் பொய்யுரைகளையெல்லாம்
எனக்குத்  தெளிவித்து   என்   களவைக்  கையொடு  பிடித்தாய்.  நான்  தவறு  செய்தவனே.
இனி இரங்குவாயாக-இவ்வாறு  தலைவன் தலைவியிடம் வேண்ட அவள், இரங்குவேம்; ஆனால் 
யாம் நினக்கு யார்?  நின்  பரத்தையராகிய  குறும்பூழ்ப்  பறவையெல்லாம்  நீ முன் அளித்துப்
பின் கைவிடுதலாலே நினது நடிப்பில் அகப்பட்டு நோய் பெரிது கொள்ளும் அவை வருந்தாதபடி 
நினக்கு  ஆகும்  அப்பரத்தையராகிய  குறும்பூழ்ப்  பறவைகள்  எல்லாவற்றையும்  பாணனால் 
அழைத்து  அவை மனந்தெளிய அளித்து உடன் ஆடுவாயாக என்றாள்.