பக்கம் எண் :

88தொல்காப்பியம் - உரைவளம்
 

கொடியோர்   கொடுமை   சுடும்   என   ஒடியாது   நல்லிசை   நயந்தோர்  சொல்லொடு 
தொகைஇப்பகுதியின் நீங்கிய தகுதிக்கண்ணும் என்பது
*- கொடியாரது கொடுமை சுடாநின்றதெனப் 
புணர்ச்சியை  ஒடியாது  புகழை விரும்பினோர் சொல்லோடே ஒருப்பட்டு வேறுபடுதலின் நீங்கிய 
தகுதிக் கண்ணும் என்றவாறு.
  

அஃதாவது, ** அக்காலத்துத்  தக்கதறிதல். புகழை  விரும்பினோர்  சொல்லும் சொல்லாவது, 
காமம் விரும்பும் பரத்தையரைப் போலாது அறத்தை விரும்புதல்.
  

உதாரணம்
  

‘யாரிவனெங் கூந்தல்’ என்னும் மருதக்கலியுள் (89) 

“மாண மறந்துள்ளா நாணிலிக்கிப்போர்
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே
 உறழ்ந்திவனைப்

பொய்ப்ப விடேஎமென நெருங்கில் தப்பினேன்
என்றடி சேர்த்தலுமுண்டு”
1

  

என்பது ஆற்றாமை வாயிலாகப் பகுதியினீங்கிய தகுதி.
  

பாணன் முதலானோர்க்கு வாயில் நேர்ந்தது வந்த வழி காண்க.
  

கொடுமை   யொழுக்கங்   கோடல்2   வேண்டி   யடிமேல்   வீழ்ந்த   கிழவனை  நெருங்கிக் 
காதலெங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின் கண்ணும் என்பது-தலைவனது கொடுமை
யொழுக்கத்தினைத் தலைவியே பொறுக்க வேண்டி
  


* கொடியோராகிய  தலைவனது  பரத்தையிற்  பிரிவாகிய  கொடுமை  தன்னைச்  சுடும்  என்று
புணர்ச்சியை  மறாது  நல்லிசை  நயந்த  அறிஞரது  அறச்சொற்களோடு உள்ளம் பொருந்தித் 
தன்னின் தலைவனை வேறுபடுத்திக் காணாது அவனொடு ஒன்றுபட்டு ஒழுகும் தகுதிக் கண்ணும்.
  

** அஃதாவது-தகுதியாவது.
  

1. பொருள் : நெஞ்சமே!  இத்தலைவனைப்  பொய்சொல்லித் தப்பிக்க விடேம்என்று நினைந்து 
நெருங்கிச்  சினந்து  கூறினால்,  இவனோ  தவறு  செய்து  விட்டேன் என்று நம் அடிக்கண் 
வீழ்தலும் செய்வான். ஆதலால்  நாம்  மகிழ்வாய்  இருத்தலை  மறந்து  நம்மை  நினையாத 
நாணிலியாகிய  தலைவனிடம் ஊடுதலாகிய போரில் தோற்று அதனால் வரும் புணர்ச்சியாகிய 
பயனை எய்துவாயாக.
  

2. கோடல்- பொறுத்துக் கொள்ளுதல்.