இதன் பொருள்:- காமநிலை உரைத்தலும்-தலைவனது காம மிகுதி கண்டு இதன் நிலை இற்றென்று இழித்துக் கூறுவனவும், தேர்நிலை உரைத்தலும்-அங்ஙனங்கூறி அவன் தேருமாறு ஏதுவும் எடுத்துக்காட்டுங் கூறலும், கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்-தலைவன் தாழ்ந்தொழுகியவற்றை அவன் குறிப்பான் அறிந்து வெளிப்படுத்தி அவற்கே கூறுதலும், ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும்-வேள்விக் கபிலை பாற்பயங்குன்றுதலானுங் குன்றாது கலநிறையப் பொழிதலானும் உளதாய நிமித்தம் பற்றித் தலைவற்கு வரும் நன்மை தீமை கூறுதலும், செலவுறு கிளவியும்-அவன் பிரியுங்கால் நன்னிமித்தம் பற்றிச் செலவு நன்றென்று கூறுதலும், செலவு அழுங்கு கிளவியும்-தீயநிமித்தம் பற்றிச் செலவைத் தவிர்த்துக் கூறுதலும், அன்ன பிறவும்-அவை போல்வன பிறவும், பார்ப்பார்க்கு உரிய-அந்தணர்க்கு உரிய என்றவாறு. |
தலைவன் நினையுமாற்றாற் காமநிலை யுரைத்தலும் அடங்கிற்று. ஏனையவற்றிற்கும் இருவகைக் கைகோளிற்கும் ஏற்பன கொணர்ந்து ஒட்டுக. ‘பார்ப்பான் பாங்கன்’ (501) என உடன் கூறினமையிற் பாங்கற்கு ஏற்பனவுங் கொள்க. இவையெல்லாந் தலைச்சங்கத்தாரும் இடைச்சங்கத்தாருஞ் செய்த பாடலுட் பயின்ற போலும். இக்காலத்தில் இலக்கியமின்று, பாங்கன் கூறுவன “நோய் மருங்கறிநருள்” அடக்கிக் கொண்டு எடுத்து மொழியப்படுதலன்றிக் கூற்று அவண் இன்மை உணர்க. அது, |