பக்கம் எண் :

கற்பியல் சூ.41275
 

தலைவன் வன்புறை
  

182.

துன்புறு பொழுதினும் எல்லாங் கிழவன்
வன்புறுத் தல்லது சேறல் இல்லை.

(43)
 

பி.இ.நூ.
  

நம்பியகம் 88
  

இளம்.
  

இது தலைவற் குரியதோர் மரபு உணர்த்திற்று.
  

இ-ள்:  துன்புறு  பொழுதினும்  எல்லாப்  பிரிவினும்  தலைவன்  தலைவியை வற்புறுத்தியல்லது சேறல்
இல்லையென்றவாறு
  

துன்புறு பொழுதாவது களவுக்காலம். களவினும் கற்பினும் பொது என்றவாறு.
  

நச்.
  

இது,   முன்னர்க்   கிழவி   முன்னர்   (181)   என்பதனாற்   குறிப்பினான்   ஆற்றுவித்துப்  பிரிதல்
அதிகாரப்பட்டதனை ஈண்டு விளங்கக் கூறி வற்புறுத்துமென்கின்றது.
  

இதன் பொருள்: துன்பு  உறுபொழுதினும்  உணர்த்தாது  பிரிந்து  தலைவி துன்பம் மிக்க பொழுதினும்
உம்மையான்  உணர்த்திப்   பிரிந்து   துன்பம்   மிகாதபொழுதினும்,  எல்லாம் சுற்றமுந்தோழியும் ஆயமுந்
தலைமகள் குணமாகிய அச்சமும்  நாணமும்  மடனுமாகியவற்றையெல்லாம்,  கிழவன்  வன்புறுத்து  அல்லது
சேறல் இல்லை-தலைவன் வலியுறுத்து அல்லது பிரியான் என்றவாறு.
  

எனவே    இவற்றை  முன்னர்  நிலைபெறுத்திப்  பின்னர்ப்  பிரியுமாயிற்று.   செல்லாது  பிரியுங்கால்,
போழ்திடைப்படாமன்  முயங்கியு  மதன்றலைத்  தாழ்கதுப்  பணிந்து முள்ளுறழ்  முளையெயிற் றமிழ்தூறுந்
தீ   நீரைக்   கள்ளினு  மகிழ்   செய்யுமெனவுரைத்தும்   (கலி-4)  இவை   முதலிய   தலையளி  செய்து,
தெருட்டிப்பிரிய அவை பற்றுக்கோடாக ஆற்றுதலின் அவள் குணங்கள் வற்புறுத்துவன ஆயின.
  

இனி  உலகத்தார்  பிரிதலும்  ஆற்றியிருத்தலுமுடையரென உலகியலாற் கூறலும்  பிரிவுணர்த்திற்றேயாம்.
இனிப் பிரிவினை விளங்கிக் கூறி ஆற்றியிருவென்றலும் அவற்றை வற்புறுத்தலாம்